பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் சொல்ல மறந்த கதை படத்திலும் நடித்திருக்கிறார். புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி அனிதா குப்புசாமி. இவர் தனது கணவர் குப்புசாமியுடன் இணைந்து பல மேடைகளில் நாட்டுப்புற இசைக்கச்சேரி செய்திருக்கிறார்.
யூடியூப் சேனலில் மாடித் தோட்டம், சமையல் குறிப்புகள் பதிவுகளை செய்தும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். நாட்டுப்புற பாடல்கள் பாடம் நடத்த வந்த பயிற்சி ஆசிரியர் புஷ்பவனம் குப்புசாமியிடம், மாணவியாக வந்த அனிதா அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப் புற இசையால், குடும்ப வாழ்க்கையில் இணைந்த தம்பதி என்ற பெருமை புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதிக்கு உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய நாட்டுப்புற இசை பாடல்கள் கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும். அந்தளவுக்கு சிறந்த பாடகர்களாக உள்ளனர்.
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து சென்னைக்கு விஜயராஜ் என்ற பெயருடன் வந்தவர். பிறகு விஜயகாந்த் ஆக மாறி கிடைத்த படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முன்னுக்கு வந்தவர்.
விஜயகாந்த் நடித்த படங்களில், அவரது திரை பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் வைதேகி காத்திருந்தார். ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இளம் விதவை கேரக்டரில் ரேவதி நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அனிதா குப்புசாமி கூறுகையில், நான் பாட்டு கிளாஸூக்கு அப்போது போய்க்கொண்டு இருந்தேன். வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதி கேரக்டரில் நடிக்க ஒரு பெண்ணை தேர்வு செய்யும் பொறுப்பை, என்னுடைய பரதநாட்டிய மாஸ்டரிடம்தான் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கொடுத்திருந்தார். என் வீட்டில் பாட்டு கிளாஸ் செல்ல அனுமதிப்பதே பெரிய விஷயம். சினிமாவில் நடிக்க எங்கே சம்மதிக்க போகிறார்கள், என்று அந்த படத்தில் ரேவதி கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டேன் என்று அனிதா குப்புசாமி வருத்தமாக கூறியிருக்கிறார்.





