விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தங்கலான் திரைப்படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அருண்குமாருடன் அவர் கைகோர்த்தார். பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்த அருண்குமார், தனது முதல் திரைப்படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருந்தார்.
பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் பெரியளவு ஓடவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக அது நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து சேதுபதி திரைப்படத்தை இயக்கினார். ஒரு பக்கா மாஸ் திரைப்படமாக அது எடுக்கப்பட்டது. இது அருண்குமாரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.
ஆனால் மீண்டும் விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து கொடுத்த சிந்துபாத் திரைப்படம் அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அந்த படம் பின்னடைவை சந்தித்ததால் அருண்குமார், தனது இயக்கத்திற்கு சிறிய இடைவேளை விட்டார். பிறகு அவர் சித்தார்த்துடன் கைகோர்த்து எடுத்த திரைப்படம் தான் சித்தா.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. மிக முக்கியமாக விமர்சன ரீதியாக இந்த திரைப்படத்தை பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். இப்படியான சூழலில்தான் அவர் விக்ரமுடன் கைகோர்த்து வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.
கடந்த 27ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ஓரிரு குறைகள் இருந்தாலும், அது உறுத்துவது போல் அமைவதில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஒரே நாள் இரவில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் சூழலில், அடுத்தது என்ன என்பதை சஸ்பென்ஸ் கலந்த காட்சிகளுடன் கூறி இருக்கிறார் இயக்குனர் அருண்குமார்.
இப்படியான சூழலில் விக்ரம் அடுத்ததாக, மண்டேலா மாவீரன் படங்களை எடுத்த மடோன் அஸ்வினுடன் கைகோர்த்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட இருக்கிறது. இதற்கு வீரமே ஜெயம் என டைட்டில் வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் இதுதான் டேக் லைனாக இருக்கும். அதையே இப்போது தலைப்பாக வைக்க இயக்குனர் முடிவு செய்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





