தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவும், அதில் நடிகர் சூர்யா நடிக்கவும் 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிவான நிலையில், அதற்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரூ. 19 கோடி வரை தயாரிப்பாளர் தாணு சம்பளமாக தந்திருக்கிறார்.
ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த வாடிவாசல் படம் சில காரணங்களால் நின்று போய்விட்டது. அந்த படம் இனி வர வாய்ப்பில்லை. அதனால் வாடிவாசல் படத்துக்கு பதிலாக சிம்பு நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க முடிவானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணுதான் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க 10 கோடி ரூபாய் முன்பணம் மற்றும் பிராபர்டி ஷேர் அடிப்படையில் சம்பளம் என்று முதலில் நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்போது சிம்பு ரூ. 30 கோடி அட்வான்ஸ், பிறகு சம்பளம் குறித்து பேசிக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் தாணுவிடம் பேசியிருக்கிறார். இது தாணுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் இயக்குனர் வெற்றிமாறன், முதலில் ரூ. 19 கோடி தான் அவரது சம்பளம் என்று இருந்த நிலையில், இப்போது தனது சம்பளம் ரூ. 25 கோடி என அதிகரித்து இன்னும் 6 கோடி ரூபாய் வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்டுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு சம்பளம் எகிறியதால், படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவானால் தாக்குப்பிடிக்க முடியுமா, என்ற கேள்வியும் குழப்பமும் தயாரிப்பாளர் தாணு தரப்பில் ஏற்பட்டுள்ளது. தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை 2 படம் சரியாக போகவில்லை. சிம்பு கடைசியாக நடித்த பத்துதல தக்லைஃப் படம் மாஸ் ஹிட் படங்களாக இருக்கவில்லை. மேலும் ஓடிடி தளங்களும் படங்களுக்கு தரும் டிஜிட்டல் ரைட்ஸ் விலையை வெகுவாக குறைத்து விட்டன என்ற சூழலில் தாணு தடுமாற்றத்தில் உள்ளார்.
இதையடுத்து சிம்பு தரப்பில் இருந்து, தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த படத்தை அவர்கள் தயாரிக்க கேட்கப்பட்டது. வெற்றிமாறன் சிம்பு கூட்டணி அவர்களுக்கு ஓகே என்றாலும், ரூ. 125 கோடி பட்ஜெட் என்பது அவர்களையும் யோசிக்க வைத்துள்ளது. அதனால் இந்த படம் டிராப் ஆவதும், தயாரிப்பு நிறுவனம் கைமாறுவதும் என இரண்டில் ஒன்று நிச்சயம் என்று தகவல் வெளியாகி உள்ளது.





