இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் பிரபுவின் மகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு அறிமுகமான படம் கும்கி. இந்த படம் நல்ல ஒரு அறிமுகத்தையும் அடையாளத்தையும் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் விக்ரம் பிரபு நடித்தாலும் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை தரவில்லை.
குறிப்பா டாணாக்காரன் இவன் வேற மாதிரி உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே விக்ரம் பிரபுவின் பெயர் சொல்லும் படங்களாக இருந்தன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெளியான படம் சிறை. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான இந்த படம் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு 25வது படமாக அமைந்தது.
சிறை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித் குமாரின் மகன் அக்சய்குமார் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அனீஸ்மா அனந்தா மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி இருந்ததால் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் டாணாக்காரன் படத்துக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபுவுக்கு சிறை திரைப்படம் முக்கிய ஒரு வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் சிறை கைதி ஒருவரின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப் பார்வை குறித்தும் அழுத்தமாக பேசும் ஒரு திரைக்கதையில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் சிறை படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கணிசமான வசூலையும் இதுவரை குவித்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் சிறை படம் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான படம் என்ற நிலையில், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் வெளியாகவில்லை. தமிழில் மட்டுமே வெளியான சிறை படம் மொத்தமாக 31.58 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான சிறை படம் மிகப்பெரிய லாபத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒரு படம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு பட்ஜெட்டும் பெரிய ஹீரோக்களும் காரணமில்லை. கதையும் திரைக்கதையும் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. அதனால் நட்சத்திர நடிகர்கள் பில்டப் கதைக்களம் பெரிய பட்ஜெட் என படங்களை உருவாக்காமல் சமூகத்துக்கு நல்ல கருத்துகளை சொல்லும் அழுத்தமான சிறை போன்ற படங்களை தர இன்றைய இயக்குனர்கள் யோசித்து திருந்த வேண்டும்.





