தனிப்பட்ட முறையில் அந்த கலைஞர்களின் சொந்த வாழ்க்கை மீது பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சைகள் இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்களாக அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அந்த வரிசையில் சிவாஜி கணேசன் வைரமுத்து இளையராஜா பாரதிராஜா பாலுமகேந்திரா போன்றவர்களை சொல்வதுண்டு.
ஏனெனில் இவர்கள் தங்களது படைப்புகளால் தமிழ் சினிமாவில் வரலாறு படைத்தவர்கள். அந்த வரிசையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன. இளையராஜா பாரதிராஜா வைரமுத்து என்கிற 3 மகா கலைஞர்களால் உருவான படங்களும் பாடல்களும் இசையும் இன்னும் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி பிடிக்கின்றன.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது, எனக்கு எதிராக ஒரு கூட்டம் பழி சுமத்தி வசைப்பாடி என் பிம்பத்தை உடைக்க எத்தனித்த காலத்தில் நான் எப்போதும் போல மௌனமாகவே இருந்தேன். எனக்கு ஆதரவாக எல்லா திசைகளிலும் இருந்து குரல் ஒலிக்கும் என்று காத்திருந்தேன்.
ஆனால் எல்லா திசைகளும் மௌனம் அனுசரித்த போது எனக்கு ஆதரவாக ஒலித்த குரல்கள் இரண்டு. அதில் ஒருவர் பாரதிராஜா. இன்னொருவர் சீமான். அரிவாள் எடுக்க நேரிடும் என்று பாரதிராஜா உசிலம்பட்டி பாஷையில் பேசிய பிறகுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
கடைசி காலத்தில் ஒரு செய்தியை நான் பாரதிராஜாவிடம் சொல்லவில்லை. அடிக்கடி நினைவு தப்புகிற வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு கலைஞனிடம் நான் ஞானபீடம் பெற்று இருக்கிறேன் என்று என் பெருமையை பீற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் பெருமை பேசுகிற இடத்தில் அவர் உடல் நிலை இல்லை.
அதனால் கடைசிவரை நான் ஞான பீடம் விருது பெற்றதை மறைத்து விட்டேன். நான் சொல்லாவிட்டால் வேறு யாரும் அவரிடம் சொல்லி இருக்க மாட்டார்கள். அந்த செய்தியை அறியாமலேயே மண்ணுக்குள் போய்விட்டார் பாரதிராஜா என்று தனது ஆத்மார்த்தமான நண்பர் இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து கவிஞர் வைரமுத்து அந்த நேர்காணலில் உருக்கமாக பேசியிருக்கிறார்.





