மலையாள சினிமா கலைஞர்களுக்காக நீண்ட காலமாக அம்மா சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அம்மா சங்கத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று தலைவரானார். அம்மா சங்க வரலாற்றில் முதல்முறையாக பெண் தலைவராக ஸ்வேதா மேனன் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் ஜூன் 21ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தலைவர் ஸ்வேதா மேனன் பொதுச் செயலாளர் குக்கு பரமேஸ்வரன் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து ரமேஷ் பிஷாரோடி எம்எல்ஏ தலைமையில் தற்காலிக குழு (அட் ஹாக் கமிட்டி) அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அம்மாவின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை என்று திடீரென அறிவித்த நடிகை ஸ்வேதா மேனன் தற்காலிக குழு பற்றி பல கேள்விகளை எழுப்பினார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு ராஜினாமா செய்தாலும் அடுத்த தேர்தல் நடந்து புதிய குழு பொறுப்பேற்கும் வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குழு தான் பதவியில் நீடிக்க வேண்டும்.
அம்மா சங்கத்தின் விதிகளின்படி ஒரே நேரத்தில் ஒரு குழு மட்டுமே செயல்பட முடியும். எனவே தற்போதைய தற்காலிக குழுவுக்கு எந்தவிதமான சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லை. அவர்கள் அம்மா உறுப்பினர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் கூறினார். தற்காலிக குழு அட் ஹாக் கமிட்டிக்கு எதிராக எர்ணாகுளம் முன்சீஃப் நீதிமன்றத்தில் தலைவர் ஸ்வேதா மேனன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த கமிட்டியின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனால் ரமேஷ் பிஷாரோடி ராஜினாமா செய்தார். இதுபற்றி நடிகை ஸ்வேதா மேனன் கூறுகையில், அம்மா அமைப்புக்குள் இருந்த உட்கட்சிப் பூசல்களை பயன்படுத்தி சிலர் அமைப்பை கைப்பற்ற முயன்றனர். நீதிமன்றம் அந்த முயற்சியை தடுத்துள்ளது. ராஜினாமா செய்யாமல் உறுதியாக இருந்து போராட்டத்தை தொடருமாறு கூறிய மூத்த நடிகர்களான மம்முட்டி மோகன்லால் ஆகியோருக்கு எனது நன்றி.
திடீரென உள்ளே நுழைந்த 10 பேர் அல்லது 15 பேர் அம்மாவின் செயல்பாடுகளை தீர்மானிக்க கூடாது. பெரும்பான்மையான உறுப்பினர்களே அதை தீர்மானிக்க வேண்டும். குழுவில் உண்மையாகவே இடம்பெற விரும்புவோர் பின்பக்கம் வழியாக நுழைவதற்கு பதிலாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் அம்மா சங்கத்தின் தலைவர் ஸ்வேதா மேனன் கூறியிருக்கிறார்.





