சினிமாவில் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை என்றால் அவர்களால் தொடர்ந்து ஜெயிக்க முடியாது. சினிமாவில் நீடித்திருக்கவும் முடியாது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சிறந்த கலைஞனுக்கு யதார்த்த படைப்பாளிக்கு எப்போதுமே உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை என்பதும் கசப்பான மறுக்க முடியாத உண்மை.
பாரதி கண்ணம்மா பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு பொக்கிஷம் ஆட்டோகிராப் பாண்டவர் பூமி தவமாய் தவமிருந்து போன்ற மிக நல்ல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். ஆரம்பத்தில் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பிறகு இயக்குனராக ஜெயித்து காட்டினார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சேரன் இயக்கிய மாயக்கண்ணாடி திருமணம் போன்ற படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதே நேரத்தில் சொல்ல மறந்த கதை பிரிவோம் சந்திப்போம் ராமன் தேடிய சீதை போன்ற பிற இயக்குனர்களின் படங்களிலும் நல்ல நடிப்பை தந்தார். ஆனாலும் அதுவும் தொடரவில்லை.
இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக அவர் கலந்துக்கொண்டார். தொடர்ந்து படங்களை இயக்கவும் படங்களில் நடிக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. பாமக நிறுவன தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் அவரது முயற்சியும் கைகூடாமல் போய்விட்டது.
இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தற்போது டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிய கமிட் செய்யப்பட்டுள்ளார். ஜெயா டிவியில் இயக்குனர் சேரன் தொகுத்து வழங்கும் யார் சரி? என்ற ஒரு விவாத நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இதை சேரனே தொகுத்து வழங்கி தர உள்ளார்.
விஜய் டிவியில் கோபிநாத் வழங்கும் நீயா நானா விவாத நிகழ்ச்சியை போல ஜெயா டிவியில் யார் சரி? என்ற இந்த விவாத நிகழ்ச்சி பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெறும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய திரையில் திரைப்படங்கள் வாயிலாக தனது சமூக கருத்துகளை பேச முடியாத இயக்குனர் சேரன், கடைசியில் சின்னத்திரையில் தனது மனக்குறைகளை வெளிப்படுத்தி சமூக அவலங்களை சுட்டிக்காட்ட அதிக வாய்ப்புள்ளது.





