கேரள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் தந்தையைப் போலவே நடிப்பில் கலக்கி வருகிறார். துபாயில் வணிக மேலாளராக பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து தனது கேரியரை மாற்ற முடிவு செய்து திரைத்துறைக்குள் நுழைந்தார். செகண்ட் ஷோ என்னும் திரைப்படத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்து தனது திரையுலக வாழ்க்கையை அவர் தொடங்கினார்.
இதன்பிறகு மலையாளத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான உஸ்தாத் ஹோட்டல், துல்கர் சல்மானின் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. தேசிய விருதை பெற்ற இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை புரிந்தது. தனது இரண்டாவது திரைப்படத்திலேயே மலையாளத்திற்கான பிலிம்பேர் விருதையும் துல்கர் வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஏ பி சி டி, பூமி, பெங்களூரு டேஸ், விக்ரமாதித்தன், சார்லி என அவர் நடிப்பில் வெளியான அத்தனை திரைப்படங்களும் சக்கை போடு போட்டன. இதில் சார்லி திரைப்படத்தின் மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை துல்கர் சல்மான் உருவாக்கினார். அவருக்கு மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் துல்கர் என்று கூறலாம். இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். வித்தியாசமான கதைகளத்தில் உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். துடிப்புள்ள இளைஞராகவும், காதல் மன்னனாகவும் அவர் கலக்க பெண்களின் ஆசை நாயகனாக உருவெடுத்தார். பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் துல்கர் சல்மானை நன்கு அறியச் செய்தது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது சூர்யா சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்திலும் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த வரிசையில் தற்போது அவர் தெலுங்கு நடிகர் நாதமுரி பாலகிருஷ்ணா படத்திலும் இணைந்துள்ளார். பாலகிருஷ்ணாவின் 109 ஆவது திரைப்படமாக உருவாகும் இதில், துல்கர் சல்மானுக்கு முக்கிய இடம் என்று கூறப்படுகிறது. பிற நடிகர்களின் படத்தில் ஈகோ பார்க்காமல் அவர் நடித்த வருவதாக பலரும் பாராட்டியுள்ளனர்.





