தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குட்பேட் அக்லி படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இப்போது நடிகர் அஜீத்குமார் துபாய் இத்தாலி பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் கலந்துக்கொண்டு வருகிறார். பல போட்டிகளில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணி வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்குமார் ஆரம்பத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். அமராவதி என்ற படத்திலும் நடித்திருந்தார். விளம்பரத்தை ஏதேச்சையாக பார்த்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இயக்குனர் வசந்திடம் ஒருமுறை பேசும் போது, உங்களது படத்துக்கு ஒரு இளம் வாலிபன் புதுமுக ஹீரோ வேண்டும் என்று சொன்னீர்களே, அதற்கு இந்த பையன் பொருத்தமாக இருப்பார் என, நடிகர் அஜீத்குமார் நடித்த அந்த விளம்பரத்தை சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் ஆசை படத்தில் வசந்த் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்தார்.
தனது ஆரம்ப கால சினிமா பயணம் குறித்து நடிகர் அஜீத்குமார் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, ஆரம்பத்தில் என்னுடைய பிஸினஸ்சில் சில கடன்கள் ஏற்பட்டது. அப்போது சில படங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தில் என்னுடைய கடன்களை அடைத்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஐடியாவாக இருந்தது.
இதற்காக நான் பல ஆடிஷன்களில் கலந்துக்கொண்டேன். கிடைத்த வாய்ப்புகளில் நான் தகுதியானவன் என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. நான் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் நடிக்க வரவில்லை. என்னுடைய கடன்களை அடைக்க எனக்கு வேலை முக்கியமானதாக இருந்தது.
நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் கூட சரியாக பேசத் தெரியாது. அதனால் பல படங்களில் எனக்கு டப்பிங் குரல் கொடுத்த நிலையில்தான் நான் நடித்தேன் என அந்த நேர்காணலில் நடிகர் அஜீத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார். டாப் ஸ்டார் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் அஜீத்குமார் இப்படி கூறியிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.





