நடிகர் விஜய்க்கு இப்போது இன்னொரு புதிய அடையாளம். அதுவே இனி நிரந்தர அடையாளமாகவும் மாறப் போகிறது. அதாவது தமிழ் சினிமா நடிகர் என்ற நிலையில் இருந்து மாறி, தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் என்ற புதிய அடையாளத்தில் அவர், 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலின் போது மக்களை நேரில் சந்திக்க இருக்கிறார்.
நடிகர் விஜயை பொருத்த வரை, மற்ற நடிகர்கள் போல மார்க்கெட் இழந்த பிறகு சினிமாவை விட்டு அரசியலுக்கு வரவில்லை. எம்ஜிஆரை போல, சினிமாவின் புகழின் உச்சியில் இருக்கும்போதே விஜய் அரசியலுக்குள் வருகிறார். எம்ஜிஆர் அரசியல்வாதி ஆனபோதும் சினிமாவில் டாப் ஸ்டராக தான் இருந்தார். அதனால் எம்ஜிஆரை போல, விஜயின் அரசியல் வருகையை பலரும் ஒப்பிடுகின்றனர்.
தமிழக அரசியலை பொருத்தவரை, விஜய் எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாமல் வருகிறார். அவருக்கு அரசியல், நாட்டுநடப்பு, மக்கள் பிரச்னைகள் குறித்து என்ன தெரியும் என்று இப்போதே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டன.
இன்னும் இரண்டரை ஆண்டுகளே சட்டசபை தேர்தலுக்கு உள்ளன. அதற்குள் விஜய் குறித்த இந்த விமர்சனத்தை அவர் மாற்றிக்காட்ட வேண்டும். அப்படி என்றால், அவரது அரசியல் கொள்கைகள், அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், நிர்வாக ரீதியான செயல்கள், அரசு துறை பணிகள் போன்றவை குறித்து, மக்கள் மத்தியில் அவர் தெரிவிப்பது மிக முக்கியம். அவரை பற்றிய விமர்சனங்களுக்கும் இது பதிலாக அமையும்.
அதனால் மிக விரைவில் தளபதி டிவி என்ற புதிய நியூஸ் சேனல் ஒன்றை துவங்க நடிகர் விஜய் திட்டமிட்டு, அதற்காக தீவிரமாக ஆலோசித்து வருகிறார். புதிய சேனல் ஆரம்பிப்பதா அல்லது ஏற்கனவே உள்ள டிவி சேனல்களில் ஒன்றை விலைக்கு வாங்குவதா என்றும் அவர் பேசி வருகிறார். இதில் கேப்டன் டிவி, மெகா டிவி அல்லது வசந்த் டிவி போன்ற சேனல்களில் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தில் தொழில்நுட்ப அணி மூலம், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் பெருமளவில் டிவிதான் முக்கிய ஊடக தளமாக பார்க்கப்படுகிறது. டிவி செய்தி சேனல்களில் வரும் தகவல்களே 100 சதவீதம் உண்மையாக இருக்கும் என்று கருதும் மக்களும் அதிகளவில் இருப்பதால், தளபதி டிவி சேனல் ஒன்றை விரைவில் துவங்க, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.





