நடிகர் அஜித்குமாருக்கு இந்த ஆண்டு மட்டும் இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. இதில் முதல் திரைப்படமான விடாமுயற்சி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இது அஜித் ரசிகர்கள் மத்தியிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொய்வான திரைக்கதை மற்றும் மாஸ் காட்சிகள் இல்லாததால் விடாமுயற்சி திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அஜித்திற்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படமாகவே இது எடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அஜித்தை புகழும் காட்சிகள் ஏராளம் படத்தில் இருந்தன.
பழைய பாடல்கள், மற்றும் மேஷப் காட்சிகளாகவே இந்த திரைப்படம் இருப்பதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஒன்று அஜித்தை பலர் புகழ்கிறார்கள், இல்லையென்றால் அவரே அவரை புகழ்ந்து கொள்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
ஒட்டுமொத்தமாக குட் பேட் அக்லி திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஐரோப்பிய பந்தயத்தில் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அஜித்குமார் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், நான் மீண்டும் கார் பந்தயத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தபோது உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 42 கிலோ குறைத்தேன். கார்பந்தயத்தில் பங்கேற்றபோது சினிமாவில் நடிக்க கூடாது என்பதே எனது சிறந்த முடிவாக இருந்ததால் அதையே செய்தேன்.
அடுத்த ஆறு வருடங்களுக்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என்னிடத்தில் இருப்பதை நான் அதிர்ஷ்டம் என்றே பார்க்கிறேன். இனி ஒவ்வொரு ஆண்டும் தரமான திரைப்படத்தை நீங்கள் பார்ப்பீர்கள். எனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.





