தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக ரசிகர்களின் மனம் கவந்தவர் தம்பி ராமையா. பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர், வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தையும் இயக்கியவர். இவரது மகன் உமாபதியும் நடிகர்தான். நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் இவர்களது திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் விமரிசையாக நடந்தது.
தயயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் ராஜாகிளி. இந்த படத்துக்கு தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனரான தம்பி ராமையா உருவாக்கி உள்ள இந்த படத்தை, அவரது மகன் உமாபதி டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படம் மூலம் இயக்குனராக உமாபதி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கதையின் நாயகனாக இந்த படத்தில் தம்பி ராமையா நடித்துள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். மேலும் ஸ்வேதா சுபா பிரவீன் முபாஷிர் இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் ராஜாகிளி படத்தில் நடித்துள்ளனர். அண்ணாச்சி ஜீவா ஜோதி வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு ராஜாளி படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
வருகிற டிசம்பர் 13ம் தேதி ராஜாகிளி படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. சென்னையில் ராஜாகிளி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தம்பி ராமையாவின் சம்பந்தி, டைரக்டர் உமாபதியின் மாமனார் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் அர்ஜுன் பேசியதாவது, ராஜாகிளி படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். இது என்னுடைய குடும்ப படம் போல இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ, மாப்பிள்ளை டைரக்டர். நான் கூட இதுவரை நடிக்காத அளவுக்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் ராமையா நடித்திருப்பதாக சொன்னார்கள். இது சரியில்லை சார்.
நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக உள்ள முதல் மேடை இது. நிறைய இதுபோல் பார்க்கப் போகிறீர்கள். எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்க போகிறோம். அதை சொல்லக்கூடாது செய்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்கின்றனர். ஆனால் இப்போது வரை அவர் என்னை கூப்பிடவே இல்லையே. அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று பேசியிருக்கிறார்.





