நடிகர் தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து டைரக்ட் செய்திருக்கிறார். லட்சுமன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படம், கடந்த 20ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தினேஷ் மனைவியாக சுவாதிகாவும், மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி, டிஎஸ்கே உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், பல காட்சிகள் யதார்த்தமாகவும் வாழ்வியல் சம்பவங்களை கண்முன்னே காட்டுவதாகவும் இருக்கிறது. குறிப்பாக படத்தில் விஜயகாந்த் பாடலான நீ பொட்டு வெச்ச தங்கக்குடம் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகியிருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளனர்.
லப்பர் பந்து படத்தை பொருத்தவரை, மாமனார் மருமகன் இருவருமே கிரிக்கெட் வீரர்கள்தான். தன் மகளை காதலிக்கும் ஹரீஷ் கல்யாணுக்கும், தினேஷூக்கும் இடையே முன்பே சண்டை வந்துவிடுகிறது. தனது கணவரை போலவே, தனது மகளும் கிரிக்கெட் விளையாடும் கணவர் அமையக் கூடாது என நினைக்கிறார் சுவாதிகா. ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்துமே சுபமாக முடிவதுதான் இந்த படத்தின் மையக்கதை.
இந்த படத்தை தொடர்ந்து, கெத்து தினேஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்குகிறார். அட்டக்கத்தி படத்தை இயக்கி, தினேஷை அறிமுகம் செய்ததே பா ரஞ்சித் தான். மீண்டும் அவரது இயக்கத்தில் தினேஷ் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் ஆர்யா நடிக்கிறார். சார்பட்டா பரம்பரையில் நடித்த ஆர்யா, இந்த படத்தில் பா ரஞ்சித் கேட்டுக்கொண்டதால் வில்லனாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் புதிய கேரக்டர் ஒன்றில் நடிகர் அசோக் செல்வனும் நடிக்கிறார். தினேஷ், ஆர்யா, அசோக் செல்வன் என 3 முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்குகிறது. முன்னதாக படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் தற்போது துவங்கி வேகமாக நடந்து வருகிறது. மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ், ஆர்யா இணைந்து நடிப்பதும், அதில் அசோக் செல்வனும் கை கோர்த்திருப்பது படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





