நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். பல வெற்றிப் படங்களை தந்தவர். அவரது சினிமா பயணத்தில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், போகன். சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.
ஆனால் சமீபகாலமாக ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தன. குறிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த அகிலன், இறைவன், சைரன் 108 போன்ற படங்கள் தோல்வி படங்களாக இருந்தன. காதலிக்க நேரமில்லை, பிரதர் என அவரது நடிப்பில் 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. தீபாவளிக்கு பிரதர் படம் ரிலீஸாகிறது.
இதற்கிடையே ஜெயம் ரவிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், நடிகர் ஜெயம் ரவி தனது பழைய வீட்டில், அலுவலகத்தில்தான் பல மாதங்களாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில்தான் ஜெயம் ரவி இறைவன், சைரன் 108, அடங்கமறு படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கோவா சென்றுள்ள நடிகர் ஜெயம் ரவி மாதக்கணக்கில் அங்கேயே தங்கி இருப்பதாகவும், தனிமையில் மன அமைதிக்காக அவர் அங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது. மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் 2 படம் எடுப்பதாக இருந்தும் பட்ஜெட் அதிகம் என்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் கருதி, அந்த படத்தையும் கிடப்பில் போட்டு விட்டது.
ஆனால் இப்போது புதிய தகவலாக, நடிகர் ஜெயம் ரவி மும்பையில் குடியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்துடன் இருக்கிறாரா, தனியாக இருக்கிறாரா என்பது பற்றிய தகவல் இல்லை. இனி படங்களில் நடிக்க கமிட் செய்யவும், கதை சொல்லவும் இயக்குனர்கள் ஜெயம் ரவியை சந்திக்க மும்பைக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா மற்றும் பிள்ளைகளுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் சொந்தமாக பிளாட் வாங்கி குடியேறினார். அவரைத் தொடர்ந்து இப்போது ஜெயம் ரவியும் மும்பையில் குடியேறி விட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. பிளாப் படங்களை தந்துவரும் நிலையில் ஜெயம் ரவி மும்பையில் குடியேறியது ஏன் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





