லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் பொன்னியின் செல்வன். ஏஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஜெயராம் கிஷோர் பிரபு பார்த்திபன் சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
எழுத்தாளர் கல்கி எழுதி மாபெரும் வரவேற்பைப் பெற்ற சரித்திர நாவல் தான் பொன்னியின் செல்வன். 5 பாகங்களான உருவான இந்த சரித்திர நாவலை திரைப்படமாக முதலில் எடுக்க ஆசைப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் முயற்சித்தும் அது நடக்கவில்லை.
கடைசியில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். பெரிய பட்ஜெட்டில் 2 பாகங்களாக இந்த படம் உருவானது. முதல் பாகம் 2022ம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், 2023ம் ஆண்டில் 2ம் பாகம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் முதன்முதலில் உருவான படம் நாயகன். இந்த படம் 1987ம் ஆண்டில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 38 ஆண்டுகளுக்கு பிறகுதான் கமல் மணிரத்தினம் இருவரும் தக்லைஃப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். சென்னையில் இன்று நடந்த விழாவில் தக்லைஃப் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.
ஜிங்குச்சா பாடல் வெளியீட்டை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசனிடம், நாயகன் படத்துக்கு பிறகு இத்தனை ஆண்டுகள் நீங்களும் மணிரத்னமும் இணையாமல் இடைவெளி விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டை எடுத்துக்கொண்டு மணிரத்னம் என்னிடம் வந்தார். அதுதான் பொன்னியின் செல்வன் படம். அவர் சொன்ன பட்ஜெட்டை பார்த்து என்னால் தாங்க முடியாது என்று சொல்லி அந்த படத்தை தயாரிக்க முடியாது என்று மறுத்து விட்டேன் என்று கூறினார்.
இதன் மூலம் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று உடைத்திருக்கிறார். அதனால் முதலில் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசனை அணுகிய நிலையில், பெரிய பட்ஜெட் என்பதால் அவர் மறுத்திருக்கிறார். அதன் பிறகுதான் இந்த படத்தை இரண்டு பாகங்களாக லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது தெரிய வந்துள்ளது.





