தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நகுல். பாய்ஸ் படத்தில் பரத், நகுல், சித்தார்த், தமன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். இதில் சித்தார்த் ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். முக்கிய கேரக்டரில் நடிகர் விவேக் நடித்திருந்தார்.
பாய்ஸ் படத்தின் மூலம் நகுலுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இவர் நடிகை தேவயானியின் தம்பி என்பதும் குறிப்பிட்டத்தக்கது. அதன் பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் போன்ற சில படங்களில் நடித்தார் நகுல். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பும், வரவேற்பும் கிடைக்கவில்லை.
ஆனால் அவரது அக்கா தேவயானி மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ஜொலித்தவர். ஆரம்பத்தில் அவர் ஒரு படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்த நிலையில், பிறகு காதல் கோட்டை படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். அதன்பிறகு கவர்ச்சி காட்டாமல் குடும்பப் பாங்கான கேரக்டரில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
நகுல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாஸ்கோடகாமா. இந்த படத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர், நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார். வாஸ்கோடகாமா படத்தில் பணியாற்றிய உதவியாளர் சந்துரு கூறுகையில், இந்த படத்தில் பணியாற்றிய போது நகுல் என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார். நான் வேலை இருக்கிறது, முடியாது என்று மறுத்து விட்டேன்.
இரண்டாவது முறையும் என்னிடம் கேட்டார். அப்போதும் முடியாது என்று நான் கூறிவிட்டேன். அதனால் கோபம் அடைந்த நகுல், சந்துரு படப்பிடிப்புக்கு வந்தால் நான் நடிக்க வர மாட்டேன் என்று கூறி நகுல் பிரச்சனை செய்துவிட்டார். அதனால் என்னை வாஸ்போடகாமா படத்தின் கடைசி 10 நாட்கள் படப்பிடிப்பிற்கு அழைக்கவில்லை. இதனால் எனது 2 ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது என்று அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து நடிகர் நகுல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வாஸ்கோடகாமா படத்தில் நான் நடித்த போது, சில சம்பவங்கள் நடந்ததாக கூறி, என்னை பற்றி அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் பேச்சால் நான் மன உளைச்சலுக்கு ஆளாக இருக்கிறேன் என்று நகுல் புகார் மனு அளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.





