நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தில் திரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். கடந்த அக்டோபரில் அஜர்பைஜானில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 4 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.
ஆனால் கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் வேட்டையன் படங்களை தயாரித்து வரும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், விடாமுயற்சி படத்தையும் தயாரித்து வருவதால் வெளிநாட்டில் இருந்து நிதி வருவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமாருக்கு நடந்த திடீர் ஆபரேசன், அவர் ஆரவ் உள்ளிட்ட சக நண்பர்களுடன் திடீர் பைக் டூர் சென்றது போன்ற சம்பவங்களால் விடாமுயற்சி படம் அவ்வளவுதானா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையே கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அஜித்குமார் அவருக்கு கேக் ஊட்டிக் கொண்டாடியது வைரலானது.
துணிவு படத்துக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகளாகியும் புதிய படம் இன்னும் வரவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்பு தொடருமா, தொடராதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்படி பிறந்த நாள் கொண்டாடுவது, டூர் போவது என அஜீத்குமார் இருக்கலாமா என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்ய அது வைரலானது.
இதையடுத்துதான் அஜீத்குமார் கார் ஓட்டிய போது விடாமுயற்சி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட கார் விபத்து வீடியோவை, அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார். ஆனால் அதுவும் எதிர்மறையான விமர்சனத்தை கொண்டு வந்தது. அஜீத்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாதா, ஆரவ் உயிரை மதிக்காமல் இப்படியா கார் ஓட்டுவார்கள் என்றும் அஜீத்தை திட்டி தீர்த்தனர்.
இந்த சூழலில்தான் நின்றுபோன விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்க, நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக அஜீத்குமாருக்கு உதவி இருக்கிறார். அதாவது தீபாவளிக்கு தான் வேட்டையன் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்போது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் பிஸினசை இப்போதே துவக்கி விட்டது. வரும் அக்டோபரில் வேட்டையன் ரிலீஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதன்மூலம் வினியோகஸ்தர் தரப்பில் இருந்து கிடைக்கும் ஒரு பெரிய தொகையை விடாமுயற்சி படப்பிடிப்புக்கு ஒதுக்க உள்ளனர். அதனால் வேட்டையன் ரஜினி, விடாமுயற்சி படப்பிடிப்பு நடிக்க மறைமுகமாக உதவி இருப்பதாக, இன்டஸ்ட்ரியில் பரபரப்பாக பேசப்படுகிறது.





