தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது மகன் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். கடந்த ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியானது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் 2024ம் ஆண்டில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் பான் இந்தியா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ராஜமவுலி மிக பிரமாண்டமாக இயக்கி இருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக பெத்தி படம் உருவாகி இருந்தது. கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை பெத்தி படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்றும் வசூல் ரீதியாக மிக சுமாரான தொகையை வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெத்தி படத்தின் நாயகன் நடிகர் ராம்சரண் கூறியதாவது, இந்தியாவில் சினிமா இன்னும் மிக மலிவான பொழுதுபோக்காகவே இருக்கிறது.
குடும்பத்தினருடன் சென்று படம் பார்ப்பது கூட்டுச்செயலாக நடந்து வருவதால் திரையரங்குகளில் பாப்கார்ன் விலைகளை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். டிக்கெட் விலையை விட பல தியேட்டர்களில் பாப்கார்ன் விலை அதிகமாகவே இருக்கிறது.
குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 250 ரூபாய்க்கு மேலாக ஒரு பாப்கார்ன் விற்கப்படுவதால் குடும்பத்துடன் படம் பார்க்க செல்பவர்கள் 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் நடிகர் ராம்சரண் கூறிய இந்த கருத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது கேட்டுக் கொண்டதைப் போலவே தியேட்டர்களில் பாப்கார்ன் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





