தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவரது படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. கரகாட்டக்காரன் படத்தின் வசூல் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து நடிகர்கள் ரஜினி கமல் போன்றவர்களே வியந்து போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராமராஜன், அப்போது பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ஆனால் 2000ம் ஆண்டில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். 25 ஆண்டுகளாக இவர்களது பிரிவு நீடித்து வருகிறது.
இந்நிலையில் ராமராஜனும் நளினியும் மீண்டும் இணைந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடிகர் ராமராஜன் கூறியதாவது, நடக்காத ஒரு விஷயத்தை திரித்து பேசுவதில் யாருக்கு அப்படி என்ன ஆனந்தமோ தெரியவில்லை. நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும்.
ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இனிமேல் நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை இட்டுக்கட்டி பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை. நாங்கள் இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. தனிமையாக வாழ நான் பழக்கப்பட்டு விட்டேன். இப்போது வெளியாகும் இது போன்ற வதந்திகளால் இருவரது மனமும் துயரப்படும் என்று தெரியாதா?
இந்த புரளி கிளம்பியதை தொடர்ந்து பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதுவே எனக்கு மனவேதனையை ஏற்படுத்துகிறது. எனக்கும் நளினிக்கும் எல்லாம் முடிந்துவிட்டது. முடிந்தது முடிந்து போச்சு. இனி அது ஒன்றும் செய்ய முடியாது. நடக்காத காரியம். எனவே இனியும் இப்படி இட்டுக்கட்டி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
என்னை விடுங்கள். என் பிள்ளைகள் இந்த வதந்திகளால் மன உளைச்சல் அடைய மாட்டார்களா? தயவுசெய்து நானும் நளினியும் சேர்ந்து விட்டோம் என்ற பொய்யை, வதந்தியை பரப்பாதீர்கள். நான் தனிமையில் வாழ பழகிக்கொண்டு விட்டேன் என்று நடிகர் ராமராஜன் வருத்தமாக கூறியிருக்கிறார்.





