தமிழ் சினிமாவில் தொழில் நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில், கருப்பு வெள்ளையில் ஒரு படம் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை கால அவகாசம் தேவையாக இருந்திருக்கிறது. சில பெரிய நடிகர்களின் படங்கள், ஒன்றரை ஆண்டுகள் முதல், இரண்டு ஆண்டுகள் வரை கூட எடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், இப்போது அப்படியல்ல. வளர்ந்துவிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உடனுக்குடன் அந்தந்த வேலைகளை முடித்து, அடுத்த பணிகள் வேகமாக ஆரம்பிக்கப்படுகின்றன. படப்பிடிப்பு முழுமையாக எடுத்து முடித்தபின் எடிட்டிங் என்ற நிலை மாறி, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே எடிட்டிங் பணியும் நடக்கிறது. அன்றன்று எடுத்த காட்சிகள், அன்றன்றே எடிட் செய்யப்பட்டு விடுகின்றன.
இதுமட்டுமின்றி, டப்பிங் மொபைல் வாகன வசதியும் வந்துவிட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே நடிகர் நடிகைகள், நடித்த காட்சிகளை அவ்வப்போதே டப்பிங் பேசியும் முடித்துவிட முடியும். அதனால், ஒரு படத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடிப்பது என்பது, ஏகப்பட்ட செலவுகளை மிச்சப்படுத்தும். குறிப்பாக திரையுலகம் சார்ந்த கலைஞர்களின் நேரமும் ஏராளமாக சேமிக்கப்படுகிறது. அதை ஓய்வுக்காக அல்லது அடுத்த படங்களில் நடிப்பதற்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில், சுயம்வரம் என்ற படம், 24 மணி நேரத்தில், கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டது. ஆனால், இதற்காக படப்பிடிப்புக்குழுக்கள் தனித்தனி இடங்களில், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் மேற்பார்வையில் காட்சிகள் இயக்கப்பட்டு, சரியான திட்டமிடலில் ஒரு நாளுக்குள் முடிக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு இயக்குநரும் ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான காட்சிகளை எடுத்த நிலையில், ஒரே நாளில் ஒரு முழுபடமாக சுயம்வரம் படம் எடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் 18 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாகவும், பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, கேஎஸ் ரவிக்குமார், முனீஷ்காந்த், தங்கதுரை உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு 80ஸ் பில்டப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.
இந்த படத்தின் இயக்குநர் கல்யாணன். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி போன்ற படங்களை இயக்கியவர். இவர் இந்த படத்தை 18 நாட்களில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்து இருக்கிறார். ஒரு படத்தை பற்றி டிஸ்கசன் செய்யவே, மாதக்கணக்கில், தமிழ் சினிமா ரூம் போட்டு யோசிக்கிற நிலை இருக்கையில், இப்படி 18 நாட்களில் படத்தை முடித்த இயக்குநர் கல்யாண், தாமதத்தில் பெயர் பெற்ற இயக்குநர்களுக்கு டியூசன் நடத்த முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.





