நடிகர் சரத்குமார் துவக்கத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். 1990களில் கண் சிமிட்டும் நேரம் போன்ற சில படங்களை தயாரித்தவர். கண் சிமிட்டும் நேரம், நவரச நாயகன் கார்த்திக் – அம்பிகா நடிப்பில் வெளிவந்த செம த்ரில்லிங்கான படமாக, ரசிகர்களின் மத்தியில் அப்போது பாராட்டை பெற்றது.
அதன்பிறகு புலன் விசாரணை படம் மூலம் நடிகரான சரத்குமார் வில்லன் கேரக்டரில் நடிக்கத் துவங்கி பிறகு சேரன் பாண்டியன், பெரிய கவுண்டர் பொண்ணு போன்ற படங்களில் நடித்து ஹீரோவாக மாறினார். நாட்டாமை, சூரியவம்சம், நட்புக்காக போன்ற படங்கள் அவரை முன்னணி நட்சத்திர நடிகராக மாற்றியது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிமுக விசுவாசியாக இருந்த சரத்குமார் 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார். இன்று வரை கட்சியை சரத்குமார் நடத்தி வரும் நிலையில், பெரிய அளவில் அவரது கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் மட்டும் சரத்குமார் கட்சி பணிகளில் சற்று வேகம் காட்டுவார்.
அந்த வகையில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் சமத்துவ மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு, யாருடன் கைகோர்த்து களத்தில் பணி செய்யப் போகிறது, என்ற அறிக்கையை அந்த கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சரத்குமார் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் என்னை சந்தித்து பேசினார். முதல்கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு மீண்டும் அமைச்சர் எல். முருகன் மற்றும் மூத்த தலைவர் எச். ராஜா, அரவிந்த் மேனன் ஆகிய மூன்றுபேரும் என்னை சந்தித்து 2ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். இதுவும் சுமூகமான நிலையில் நடந்து முடிந்தது.
அதனால் மூன்றாவது முறையாக மீண்டும் பாரத பிரதமராக மோடி பதவியேற்கும் விதமாக, இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தந்து, இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் மற்ற விவரங்களை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்கிறேன் என, சரத்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சரத்குமார் எம்பி சீட் கேட்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவரது மாமியார் விருப்பத்தின் படி 2026 சட்டசபை தேர்தலில் ஜெயித்து முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக, ஏற்கனவே உறுதியாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





