தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜீத்குமார் மற்றும் விஜய். இருவருமே போட்டியாளர்களாக கருதப்பட்ட நிலையில் இப்போது நடிகர் விஜய் அரசியல்வாதியாகி விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள அவர் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்து விட்டார்.
அதே போல் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி விடாமுயற்சி வெளியானது. அந்த படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில், இப்போது கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் ரூ. 200 கோடி வசூலை கடந்து பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கிறது.
உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் எப்படி சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்டுகிறாரோ அதே போன்ற ஒரு நிலையில்தான், நடிகர் அஜீத்குமாரும் விளையாட்டில் ஆர்வமாக இருந்து வருகிறார். பைக் ரேஸ் கார் ரேஸ் ரைபிள் சுடுதல் ஹெலிகாப்டர் ஓட்டுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
அவருக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படம் பண்ண பல மாதங்களாக காத்திருக்கும் சூழலில் அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் 4 மாதங்களாக கலந்துக் கொண்டுள்ளார். வரும் அக்டோபர் வரை இந்த கார் ரேஸில்தான் அஜீத்குமார் பிஸியாக இருப்பார். அதன்பிறகு நவம்பரில்தான் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். அவரது மகன் சிபிராஜ். ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். பல படங்களில் நடித்த அவர், முன்னணி நடிகராக மாற முடியவில்லை. எனினும் சராசரியான லாபம் தரும் நடிகராக தொடர்ந்து படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சிபிராஜ் கூறுகையில், ஜனநாயகன் படம்தான் கடைசி என்று விஜய் சொல்வதை ஒரு ரசிகனாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எங்களுக்காக ப்ளீஸ் அவர் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், அஜீத்குமார் போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடிகர், விடாமுயற்சி போன்ற படத்தில் நடிக்க தைரியம் வேண்டும் என்றும் சிபிராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





