நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உளள படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். சரித்திர கால படமாக உருவாகியுள்ள இந்த படம் 2 பாகங்களாக வெளிவர இருக்கிறது. இதன் முதல் பாகம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த தேதியில் ரிலீஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம், சூரரைப் போற்று படங்களுக்கு பிறகு அவரது பெயர் சொல்லும் அளவில் பெரிய வெற்றி படங்கள் எதுவும் வரவில்லை. அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம், எதற்கும் துணிந்தவன் படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன. அதுமட்டுமின்றி அவர் நடிக்க வேண்டிய வணங்கான், புறநானூறு படங்களும் கைநழுவிப் போய்விட்டன.
இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 70 நாட்கள் அந்தமானில் நடந்த நிலையில் தொடர்ந்து சென்னை, ஊட்டி, கேரளாவில் உள்ள இடுக்கி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் நடிகர் சூர்யாவுக்கு சண்டை காட்சியில் நடித்த போது தலையில் காயம் ஏற்பட்டதால் பதட்டம் உருவானது.
ஆனால் சிறிய அளவில் ஏற்பட்ட காயம்தான் என்பதால் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து தனது 44வது படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த படத்தில் பல முக்கிய ,நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவையில் நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, அவர்களது தந்தை சிவக்குமார், படத்தின் இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்துக்காக, கங்குவா படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மூத்தவர். சினிமாவின் அடையாளம். 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்துக்கு வழிவிடுவோம். கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று, சூர்யா தெரிவித்துள்ளார்.





