நடிகர் வடிவேலு என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகானார். அந்த படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான ராஜ்கிரண்தான், வடிவேலுவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்து, சின்னக்கவுண்டர் படத்தில் தனக்கு குடை பிடிக்கும் மாகாளி கேரக்டர் தந்து அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் கேப்டன் விஜயகாந்த்.
அதன்பிறகு சிங்காரவேலன் படத்தில் நடித்த போது, தேவர்மகன் படத்தில் இசக்கி கேரக்டரில் நடிக்க வடிவேலுவை கமிட் செய்தார் கமல்ஹாசன். அதன்பிறகு படிப்படியாக வளரத் துவங்கிய வைகைப் புயல் வடிவேலு, முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.
கடந்த 1990களின் பிற்பகுதியில் நடிகர் வடிவேலு சம்பளம் ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சமாக இருந்து, பிறகு 10 லட்சம் என மாறி, பிறகு 12 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. தனக்கென 10 காமெடி துணை நடிகர்களை வைத்துக்கொண்டு அவர் செய்த குரூப் காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. பல படங்கள் தோல்வியடைந்த போதும், வடிவேலு காமெடி காட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டதால், ப்ளுகிராஸ் அமைப்பு இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படம் வெளிவருமா, வெளிவராதா என்ற குழப்பமான நிலை உருவானது.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, 23ம் புலிகேசி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் போய் சொன்னேன். ராஜா குதிரையை போக விட மாட்டேன் என்கின்றனர் என்றேன். அதற்கு அவர், ராஜா குதிரையில் போகாமல், குவாலிஸ்லயா போவார் என்று என்னிடம் கிண்டலாக கேட்டார்.
உடனே அவர், போனில் ஆ ராசாவிடம் பேசினார். ராஜா, குதிரையில் போகக் கூடாது என்கிறார்களாம். நீ உடனே ராஜா குதிரையில் போற மாதிரி செய்துவிடு, நீயும் ராஜா தானே என கலாய்த்துவிட்டு போனை வைத்தார். அதன்பிறகு ஒரு வாரத்தில் புலிகேசி படம் ரிலீஸ் ஆகி விட்டது. புலிகேசி படம் வெளிவரவே கருணாநிதி காரணம், என்று பேசியிருக்கிறார் நடிகர் வடிவேலு.





