தமிழ் சினிமாவின் 1995 ஆம் காலகட்டத்திற்கு பிறகு கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமான அவர், அங்கிருந்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு டாப் நடிகையாக மாறினார். படத்தில் சிம்ரன் இருந்தால் அது நிச்சயம் வெற்றி என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவர் வளர்ந்தார்.
அது மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகர்களான விஜய் அஜித் என பலருடனும் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த அவர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். இப்படியான சூழலில் தற்போது மீண்டும் தனக்கு பிடித்தமான கதைகளில் மட்டும் சிம்ரன் நடித்து வருகிறார்.
அண்மையில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் வந்திருந்தார் சிம்ரன். அதில் அவருக்கு மிகப்பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், வாலி திரைப்படத்தின் காட்சிகளை அவர் நினைவூட்டியது திரையரங்குகளில் ரசிகர்களை குதூகளிக்க செய்தது. இதேபோல், சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் நடித்திருந்தார் சிம்ரன்.
இலங்கைத் தமிழில் சசிகுமாரின் மனைவியாக நடித்து பலரது கவனத்தையும் அவர் ஈர்த்தார். சொல்லப்போனால் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். இப்படியான சூழலில் தனது முந்தைய திரை உலக அனுபவங்களை பேட்டி ஒன்றின் மூலம் சிம்ரன் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,
ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் குடும்பம் காரணமாக நான் அப்போது அதில் நடிக்க மறுத்துவிட்டேன். அந்த வாய்ப்பையும் தவறவிட்டேன். இதன் பிறகு தான் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் நடித்து அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் ஒரு நல்ல ஆக்சன் திரைப்படம்.
அதேபோன்று மிகவும் ஸ்டைலாக அந்த திரைப்படம் இருக்கும். அதன் வெளியீட்டிற்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம். நிச்சயம் சரியான நேரத்தில் அந்த திரைப்படம் வெளியிடப்படும். விக்ரம் ஒரு பிரமாதமான நடிகர். அவரும் இந்த திரைப்படத்தில் மிகவும் ஸ்டைலாக வருவார். இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் போது நிச்சயமாக மக்கள் அதனை விரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.





