தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2002ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தனுஷை விட ஐஸ்வர்யா 5 வயது மூத்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட ஒரு சிறந்த கலைஞராக தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட்டு வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான, ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை சமீபத்தில் பெற்றது. தொடர்ந்து இப்போது இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்து, அவரே நடித்து வருகிறார்.
மேலும் அவரது நடிப்பில் குபேரா என்ற படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் படம் 2 பாகங்களாக உருவாகிறது. அதில் தனுஷ் இளையராஜாவாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நாயகனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்களது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தனர். தொடர்ந்து 2 ஆண்டுகள் அவர்களது பிரிவு நீடித்த நிலையில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர். இது கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு, கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. பின்பு, வழக்கு விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் 2வது முறையாக விசாரணைக்கு அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. பிறகு நவம்பர் 2ம் தேதி ( இன்று) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஆனால் 3வது முறையாக இன்றும் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 21ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். இப்படி 3 முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருக்கும் ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் தங்களது விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்தால் எல்லோருக்குமே நிம்மதியாக இருக்குமே, என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.





