கடந்த சில தினங்களாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டதாக வேகமாக தகவல் பரவி வருகிறது. இதை ஒரு தரப்பினர் உண்மை என்றும் ஒரு தரப்பினர் வதந்தி என்று கூறிவரும் நிலையில் இதுகுறித்து உறுதி செய்ய வேண்டிய இயக்குனர் ஷங்கர் கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார்.
அவருக்கு இப்படி ஒரு தகவல் தமிழ்நாட்டில் வைரலானது தெரியுமா என்று கூட தெரியவில்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால் இப்போதைக்கு மட்டுமல்ல, எப்போதைக்குமே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது பேசிய நடிகர் அஜீத்குமார் கூறுகையில், ஷங்கர் சாரை பொருத்த வரை ஒரு படத்தை அதில் வரும் ஹீரோ கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக தருவதற்கு நினைப்பார்.
அதனால் அவர் சொல்கிற ஹீரோ நடிகர் அவரை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் சொல்கிறபடி படப்பிடிப்பு தளத்தில் தனது முழுமையான திறமையை காட்டி நடிக்க வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டும். அப்போதுதான் ஷங்கர் எதிர்பார்க்கிற ஒரு உழைப்பை நடிப்பை திரையில் கொண்டு வர முடியும்.
ஆனால் என்னை பொருத்த வரை அந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கிற ஆள் கிடையாது. நடிப்புக்காக அந்தளவுக்கு மெனக்கெட என்னால் முடியாது. அதை நான் விரும்புவதும் இல்லை. அந்தளவுக்கு சின்சியராக எல்லாம் இருக்க முடியாது. என்னால் உடலை வருத்தி ஒர்க் அவுட் செய்யவும் முடியாது. அதனால் ஷங்கர் இயக்கத்தில் நான் நடிக்க விரும்பவில்லை.
எனக்கும் ஷங்கருக்கும் நல்ல நட்பு உள்ளது. அந்த நட்பு எப்போதும் தொடர வேண்டும். நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அவரது இயக்கத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. எப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தாலும் அதை நிச்சயமாக மறுத்துவிடுவேன் என்று நடிகர் அஜீத்குமார் உறுதியாக கூறியிருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





