அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை பலரும் அறிவார்கள். தனது வாழ்க்கையில் பல விபத்துகளை பார்த்தவர் அஜித். அந்த விபத்துகளின் காரணமாக தனது உடலில் பல அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டவர். எனினும் பைக்கின் மீதுள்ள ஆசை அவருக்கு குறையவே இல்லை. தற்போது பல உலக நாடுகளில் பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அஜித். விரைவில் உலகம் முழுவதிலும் பைக் பயணம் மேற்கொள்ளும் வகையில் தனது பரஸ்பர மரியாதை பயணத்தையும் தொடங்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜித்குமாருக்கு நடந்த ஒரு விபத்து குறித்தும் அதன் பின் அவர் செய்த ஒரு வியக்கத்தக்க காரியத்தை குறித்தும் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“வேதாளம்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது “ஆளுமா டோலுமா” பாடலை படக்குழுவினர் படமாக்கிக்கொண்டிருந்தார்களாம். அதுதான் கடைசி நாள் படப்பிடிப்பும் கூட. அதற்கு அடுத்த நாளே அஜித்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் இருந்ததாம்.

இந்த நிலையில் “ஆளுமா டோலுமா” பாடலுக்கான நடன காட்சிகளை படமாக்கி முடித்த பின், இயக்குனர் சிவா, “நடன காட்சி அருமையாக இருந்தது” என்று கூறினாராம். ஆனால் டான்ஸ் மாஸ்டருக்கோ திருப்தியாக இல்லையாம். மீண்டும் ஒன்ஸ் மோர் போகலாம் என கூறினாராம். இயக்குனர் சிவா, “இல்லை, இதுவே போதும் நன்றாக இருக்கிறது” என்று கூற, ஆனால் டான்ஸ் மாஸ்டரோ தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறியிருக்கிறார்.
உடனே அஜித்குமார், “பரவாயில்லை, நான் மீண்டும் நடனம் ஆடுகிறேன்” என்று கூற, மீண்டும் அந்த நடன காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராவிதமாக அஜித்குமார் தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதனால் காலில் பலத்த அடிபட்டது. அதனை தொடர்ந்து அஜித்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அடுத்த நாள் திட்டமிட்டிருந்த டப்பிங் பணிகளை இயக்குனர் சிவா கேன்சல் செய்துவிடலாம் என்று கூற, அதற்கு அஜித்குமார், “இல்லை, கேன்சல் செய்ய வேண்டாம். நான் டப்பிங் பேசி முடித்து தருகிறேன்” என்று கூறியது மட்டுமல்லாது அடுத்த நாள் சக்கர நாற்காலியில் வந்து டப்பிங் பேசித்தந்தாராம் அஜித்குமார். இதிலிருந்து அஜித்குமாருக்கு சினிமாவின் மீது எந்தளவுக்கு காதல் இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.





