நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமா நடிகர்களில் மிக வித்யாசமானவர். அவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் பத்திரிகைகள், ஊடகங்களில் பேட்டி, பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மற்ற நடிகர்களை போலவே இருந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு இவற்றை எல்லாம் முற்றிலுமாக தவிர்த்தார். சினிமா படப்பிடிப்பு தளம் தவிர வேறு எந்த இடத்திலும், அவர் கேமரா முன்பு தன்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்களே இசை வெளியீட்டு விழா, டிவி சேனல் நேர்காணல், விருது விழாக்களில் கலந்துக்கொள்வதன் மூலம் தங்களது படங்களுக்கு பிரமோசன் தரும் நிலையில், அஜீத் மட்டும் இதில் விதிவிலக்காக இருந்தார். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறார். ஒரு படத்தில் நடிப்பதுடன் சரி. படம் சார்ந்த வேறு எந்த நிகழ்வுக்கும் அவரை எதிர்பார்க்க கூடாது என்பதே முக்கிய நிபந்தனையாக இருந்து வருகிறது.
அஜீத் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார். கடந்த ஒரு வாரமாக அஜர்பைனானில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்துக்கு பிறகு அஜீத் நடக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இந்தமுறை அவர் தனது கொள்கையை விட்டுத் தருவாரா என்ற சந்தேகத்தை இந்த தகவல் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை பிரமோசன் நிகழ்ச்சிகளில் அஜீத் கலந்துகொள்ள மாட்டார் என்ற ஒப்புதலுடன் தான் தயாரிப்பு நிறுவனங்கள் அஜீத்குமார் படங்களை தயாரித்து வெளியிட்டன. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சன்பிக்சர்ஸ் நிறுவனத்தில் அஜீத் நடித்தது இல்லை. இம்முறை சிறுத்தை சிவா இயக்கம் என்பதால், ஒத்துக்கொண்டுள்ளார்.
ஏனெனில் ஏற்கனவே வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் சிறுத்தை சிவா. அண்ணாத்தே படத்தை தொடர்ந்து இப்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகு, அஜீத்குமார் – சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் இணைகிறது. இதில்தான் இப்போது இந்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்த வரை, அவர்கள் தயாரிக்கும் படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் குறிப்பாக இசை வெளியீட்டு விழா, படம் ரிலீஸ் ஆவது பண்டிகை காலமாக இருப்பின் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகையர் நேர்காணல் கட்டாயமாக இருக்கும். நிச்சயம் இதற்கு மறுக்கவே முடியாது. அதனால், அஜீத் சன்பிக்சர்ஸ் படத்துக்காக தன் கொள்கையை மாற்றிக்கொள்வாரா, பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா, அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இதில் இருந்து மாறுபட்டு, அஜீத்துக்கு மட்டும் இதுபோன்ற பிரமோசன்களில் பங்கேற்க அவசியமில்லை என்ற விதிவிலக்கு அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





