தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” திரைப்படமானது விரைவில் வெளியாக தயாராக இருக்கிறது. அதனை தொடர்ந்து தனுஷ் வேறொரு இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார் என்று அண்மையில் செய்தி வெளியாகியது.

கடந்த 2017-ஆம் ஆண்டு “பவர் பாண்டி” என்கிற திரைப்படத்தை முதல் முறையாக இயக்கியிருந்த தனுஷ் அந்த படத்தில் ஒரு இயக்குனராக வெற்றியை பெற்றிருந்தார். தனுஷ், ராஜ்கிரன், ரேவதி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருந்த பவர் பாண்டி திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்த வேளையில் தற்போது மீண்டும் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்க உள்ளார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தற்போது பெயரிடப்படாத அந்த திரைப்படமானது “டி-50” என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தனுசுடன் எஸ்.ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் அபர்ணா முரளி சந்திப் கிஷனின் ஜோடியாகவும் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதோடு காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் போன்ற முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றார்.

வட சென்னையில் இருக்கும் கேங்ஸ்டர்களின் படமாக உருவாக இருக்கும் இந்த “டி50” திரைப்படமானது மிரட்டலாக இருக்கும் என்று இப்போதே பேசப்பட்டு வருகிறது. கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட முடி, தாடி என மிரட்டல் லுக்கில் வலம் வந்த தனுஷ் தற்போது மொட்டை அடித்து இந்த ஐம்பதாவது படத்திற்காக தயாராகியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் மகளாக விஸ்வாசம் மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளார் என்ற தகவல் தற்போது புதிதாக வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக மாறியுள்ள அனிகா சுரேந்திரன் தனுஷ் படத்தில் இணைந்துள்ள செய்தி வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது இருப்பினும் இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன என்று படப்பிடிப்பு ஆரம்பித்தால் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.





