தமிழ் சினிமாவில் வெளியான காதல் திரைப்படங்களில் மிக முக்கியமான படம் ஓ மை கடவுளே. அசோக் செல்வன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஒரு சாதாரண காதல் கதையை ஃபேன்டஸி ஜானரில் கொடுத்து பலரையும் கவனிக்க வைத்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.
படத்தின் முதல் பாதியில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இடையேயான காதல் மற்றும் மோதல் தொடர்பாக காட்சிகள் இருக்கும். இரண்டாம் பாதியில் ரித்திகா சிங்கின் காதலை அசோக் செல்வன் புரிந்து கொள்வது போன்று சீன்களை எடுத்து இருப்பார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.
படத்தில் விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகள் வந்து இருந்தாலும் அசத்தியிருப்பார். படத்தில் அசோக் செல்வன் அடிக்கடி கூறும், அது சொன்னா உனக்கு புரியாதுடா எனும் வசனம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதனை தெலுங்கிலும் ரீமேக் செய்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.
இந்த நிலையில் தற்போது அவர், பிரதீப் ரங்க நாதனை வைத்து டிராகன் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மிஷ்கின், கே எஸ் ரவிக்குமார், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் கல்லூரி மாணவராக வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது.
வரும் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாக, அது சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தைப் போன்றே இருப்பதாக பலரும் கூறி வந்தனர். சிலர் இதனை டான் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கேலி செய்தார்கள்.
இதற்கு தற்போது இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து பதில் கூறியிருக்கிறார். அதில், டான் திரைப்படம் வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. நாங்கள் ஏன் அதனை காப்பி செய்யப் போகிறோம். படத்தில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் காத்திருக்கிறது. நான்தான் அதனை, ட்ரெய்லரில் காட்ட வேண்டாம் என்று எடிட்டரிடம் கூறிவிட்டேன். இந்த திரைப்படம் வந்த பிறகு உங்களுக்கே அது என்னவென்று தெரியும் என்று கூறியிருக்கிறார்.





