நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனிமுத்திரை பதித்தவர். அவரது நடிப்பும், உடல் மொழியும், முகபாவங்களும், வசன உச்சரிப்புகளும் யாரையும் சில விநாடிகளில் சிரிக்க வைத்துவிடும். அதனால் அவரை காமெடி டாக்டர் என்றும் கூட வித்யாசமாக வர்ணித்தது உண்டு. கடந்த 1990 முதல், 2015 வரை அவர் தமிழ் சினிமாவில் ஒரு தனி ராஜ்ஜியமே நடத்தினார் என்பது உண்மைதான்.
ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படம்தான் வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். அடுத்து சின்னக்கவுண்டர், சிங்காரவேலன் போன்ற படங்களில் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தேவர்மகன் படத்தில் அவருக்கு இசக்கி என்ற நல்ல கேரக்டர் ஒன்றை கமல்ஹாசன் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவரது வளர்ச்சி இருந்தது.
குறிப்பாக வி சேகர் படங்களில் நடிகர் வடிவேலுவுக்கு நல்ல நல்ல கேரக்டர்களாக அமைந்தன. வடிவேலுவுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்ததும், அந்த ஜோடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் பல படங்களில் வடிவேலுவுக்கு கோவை சரளாக ஜோடியாக நடித்து, அந்த காமெடி பெயர் வாங்கி கொடுத்தது.
ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் என்ற சம்பளத்தில் வடிவேலு நடிக்கும் அளவுக்கு மாதத்தில் 10 படங்களில் அவர் நடிக்க கமிட் ஆனார். இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த வடிவேலு, திடீரென சில பிரச்னைகளில் சிக்கி 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பின்றி இருந்தார்.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற ஒரு கேரக்டர் ரோலில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழா மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, பழைய படங்களில் நடிகை சவுகார் ஜானகி அழுதுகொண்டே இருப்பார். இப்படி அழுது நடிப்பதெல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகாது. மாமன்னன் படம் அப்படி ஒரு அழுகை, வேதனை நிறைந்த படமாக இருந்ததால், உங்களை அழ வைத்ததற்காகஇந்த விருது எனக்கு தரப்பட்டுள்ளது. எனக்கு இப்போது அதேபோன்ற சோக கதைகளிலும், அழுகை கதைகளிலும் நடிக்க கூப்பிடுகின்றனர். இப்போதைக்கு வேண்டாம். கொஞ்சநாட்கள் போகட்டும். பிறகு நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன், என காமெடியாக பேசி இருக்கிறார் நடிகர் வடிவேலு.





