இந்தியாவை பொறுத்தவரை ஒரு நடிகரை தெய்வமாக கும்பிடும் வழக்கம் மிக சாதாரணமான ஒன்று. எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், என்.டி.ஆர், அமிதாப் பச்சன் என தொடங்கி தற்போது விஜய், அஜித், சிம்பு வரை இந்த வழக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த மிகுதியான பக்தியால் ரசிகர்கள் தங்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது, சூடம் கொளுத்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது உண்டு. இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியர்கள் எங்கு போனாலும் இதனை கடைபிடிப்பது உண்டு.
சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் “வீர சிம்ஹா ரெட்டி” திரைப்படம் வெளிவந்தபோது கூட அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தெலுங்கு ரசிகர்கள் செய்த அலப்பறையால் அந்த ஷோவே நிறுத்தப்பட்டது. இவ்வாறு இந்திய சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஒரு அளவே கிடையாது என்பதுதான் நிதர்சனம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், தன்னுடைய தந்தையின் திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்கள் திரையரங்கில் செய்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கஜேந்திரா”. இத்திரைப்படம் வெளியானபோது ஒரு திரையரங்கின் உள்ளே மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வெடித்தார்களாம் ரசிகர்கள். சம்பவ இடத்திற்கு விஜயகாந்த், சண்முக பாண்டியன் உட்பட பலரும் சென்று பார்த்தபோது திரையரங்கில் ஸ்கிரீனெல்லாம் கிழிந்து அன்று அந்த காட்சியே நடக்காமல் போய்விட்டதாம். அந்தளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் விஜயகாந்திற்கு இருந்தார்களாம்.
விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு இணையான ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த நடிகராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





