மாரி செல்வராஜ் இயக்கிய “மாமன்னன்” திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் காண்பவர்களின் மனதை உருகவைக்கும் விதமாக நடித்திருந்தார். அதே போல் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. அதே போல் மாரி செல்வராஜ் பாணியில் “மாமன்னன்” திரைப்படமும் சாதி ஏற்றத்தாழ்வை கடுமையாக விமர்சித்திருந்தது. இதனால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆதரவு இருந்தாலும் ஒரு பக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
மேலும் இதில் வடிவேலு சபாநாயகர் ஆவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அதிமுகவை சேர்ந்த தனபாலின் கதையை தழுவிதான் வடிவேலு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், மாமன்னன் திரைப்படத்தின் உதயநிதி ஸ்டாலின் கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் முதலில் தனுஷை மனதில் வைத்துத்தான் எழுதினாராம். ஆனால் தனுஷ் இத்திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். ஆதலால்தான் உதயநிதி ஸ்டாலின் அக்கதாபாத்திரத்தில் நடித்தாராம்.
மேலும் பேசிய அவர், “தனுஷிடம் எதிர்பார்க்கிற அளவுக்கு உதயநிதியிடம் நம்மால் எதிர்பார்க்க முடியாது. உதயநிதியின் மற்ற படங்களை காட்டிலும் மாமன்னன் பரவாயில்லை என்று சொல்லலாம். ஒரு வேளை தனுஷ் நடித்திருந்தால் வடிவேலுவுக்கும் தனுஷிற்கும் போட்டி இருந்திருக்கும். அதே போல் மாமன்னன் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் இந்த படத்திற்கு இரண்டு மடங்கு லாபமும் கிடைத்திருக்கும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





