நல்ல நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ள நிலையில் இப்போது நடிகர் தனுஷூம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக, முக்கிய படைப்பாளியாக தன்னை உருவாக்கி வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தனுஷ் இயக்கிய முதல் படம் ப பாண்டி, ராஜ்கிரண் ரேவதி நடித்த இந்த படமும் பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கிய இரண்டாவது படம் ராயன். அவரது நடிப்பில் ஐம்பதாவது படமாக உருவான ராயன் இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 155 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் தனுஷ் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற காதல் கலந்த காமெடி படத்தை இயக்கி வருகிறார். இதில் அவரது அக்கா மகன் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இப்போது செம ட்ரெண்டிங்காகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து இப்போது 4வது படம் ஒன்றை தனுஷ் இயக்குகிறார். இந்த படத்தை ஆகாஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிப்பதாகவும், அசோக் செல்வன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இப்போது கூடுதல் தகவலாக இந்த படத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட்டாகி இருக்கின்றனர்.
இந்த படத்தில் நடிக்க சத்யராஜூக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் ராஜ்கிரணை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று நடிகர் தனுஷ் அவர்களை சந்தித்து பேசி, படத்தின் கதையைச் சொல்லி அவர்களின் கேரக்டர்களை சொல்லி இந்த படத்தில் நடிக்க அவர்களிடம் கால்சீட் வாங்கி இருக்கிறார். தன்னைவிட வயதில் மூத்த சீனியர் நடிகர்கள் தனது படத்தில் நடிக்கும் பட்சத்தில், அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை அழைப்பது தான் தனுஷின் வழக்கமாகவும், பண்பாகவும் இருந்து வருகிறது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிக்கவும் நடிகை சரண்யா பொன்வண்ணனை இப்படி அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசிதான் தனுஷ் சம்மதம் வாங்கினார் என்று ஏற்கனவே சரண்யா பொன்வண்ணன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இப்போது இந்த படத்திலும் ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோரை வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்து படத்தில் நடிக்க சம்மதம் பெற்றிருக்கிறார். இந்த படம் முதன்முறையாக தனுஷ் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





