இயக்குநர் அமீர் மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். பிறகு ஜீவா ஹீரோவாக நடித்த ராம் படத்தை இயக்கினார். அடுத்து சிவக்குமார் மகன் கார்த்தி நடிப்பில் பருத்திவீரன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
தொடர்ந்து ஆதிபகவன், மாயவலை உள்ளிட்ட படங்களை இயக்கிய அமீர் நடிக்கவும் செய்தார். யோகி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில், வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்காவிட்டாலும், அமீர் அந்த கேரக்டரில் நடிப்பது உறுதி என ஏற்கனவே வெற்றிமாறன் கூறியிருந்தார்.
சில மாதங்களுக்கு முன், பருத்தி வீரன் தயாரிப்பு விவகாரத்தில் கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் குறித்து மிக தரக்குறைவாக பேசி, அவமானப்படுத்தினார். ஒரு படைப்பாளியை இழிவாக பேசுவதை ஏற்க முடியாது என இயக்குநர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிக்குமார், கரு பழனியப்பன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இன்னும் பருத்திவீரன் படத்தை தயாரித்ததற்கான தொகையை, சிவக்குமார் சூர்யா தரப்பு, அமீருக்கு தராமல் இருந்து வருகின்றனர். இந்த வழக்கு சென்னை ஐ கோர்ட்டில் நடந்து வருவதால், தீர்ப்பின்படி அந்த தொகையை தந்துவிடலாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் 17 ஆண்டுகளாகியும் படம் தயாரித்த அமீருக்கு அவர்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட தராமல் ஏமாற்றி விட்டனர்.
இந்நிலையில், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜாபத் சாதிக், போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றில் சிக்கி தலைமறைவாகி இருக்கிறார். இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருப்பதால், அவரையும் சம்பந்தப்படுத்தி இந்த விவகாரத்தில் பல தகவல்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் அமீர் மிகவும் மனம் நொந்து போயுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மதுபானம், தப்பான தொழில், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தம் கொண்டவன் நான். அப்படிப்பட்ட என்னை, இதுபோன்ற தப்பான தொழில்களில் சம்பந்தப்படுத்தி பேசுவது வேதனையாக உள்ளது. இதனால் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முடியும். என் குடும்பத்துக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி காயப்படுத்த முடியும். வேறு எந்த பயனும் உங்களுக்கு கிடைக்காது. போலீஸ் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். தப்பு செய்தவன்தானே பயப்பட வேண்டும் என்று, அதில் அமீர் கூறியிருக்கிறார்.





