இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு பாரதி கண்ணம்மா மூலம் இயக்குனராக மாறியவர் சேரன். இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட சிறந்த படைப்பாளி. அவரது படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. ஆனால் சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது, பாரதி கண்ணம்மா படத்தின் கதையை கேட்டவுடன் படத்தில் நடிக்க பார்த்திபன் ஓகே சொல்லி விட்டார். ஒரு இயக்குனராக அவரது பார்வையில் இருந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று அவருக்கு அப்போதே தெரிந்து விட்டது. அதனால் உடனே சம்மதித்து விட்டார்.
ஆரம்பம் முதல் ஷூட்டிங் நன்றாக தான் போனது. ஆனால் கிளைமேக்ஸ் காட்சி வரும் போது அவர் வேறொரு விஷயத்தை முன்வைத்தார். வழக்கமாக தமிழ் படங்களில் வருவது போல காதலர்கள் ஊரை விட்டு ஓடிப் போவது, காதலி நினைப்பில் காதலன் பைத்தியமாக மாறுவது போல காட்டுவார்கள். அந்த பாதையில் பார்த்திபன், நான் சாவதில் உடன்பாடு இல்லை. நான் பைத்தியமாகி எங்கேயாவது திரிவது போல் எடுத்து விடுங்கள் என்றார்.
என்னை பொருத்த வரை படத்தின் நாயகன் விஜயகுமார்தான். சாதி வெறி பிடித்த ஒரு மனிதன், கடைசியில் மகளை இழந்த பிறகு நல்ல மனிதனாக மாறுகிறான் என்பதுதான். அவரை வைத்துதான் படம் முடிய வேண்டும். பார்த்திபன் பைத்தியமாகி விட்டார் என்று முடிப்பதால் என்னுடைய கதைக்கு பலம் இருக்காது.
ஆனால் நான் சொல்கிறபடி கிளைமேக்ஸ்சை மாத்துங்க, இல்லை என்றால் ஷூட்டிங் வர மாட்டேன் என்று பார்த்திபன் சொல்லி விட்டார். பிறகு பேசி அவரை கன்வின்ஸ் செய்தேன். அவர் மனக்குமுறல்களை கொட்டுவது போல் ஒரு காட்சியும் நான் நினைத்தது போல் ஒரு காட்சியும் 2 விதமாக எடுத்து வைத்தேன். பிறகு 3 பெரிய இயக்குனர்கள் பார்த்து எதை அவர்கள் தேர்வு செய்கிறார்களோ அதை படத்தில் கிளைமேக்ஸ் ஆக வைக்கலாம் என்றும் பார்த்திபனிடம் சொன்னேன். அவரும் ஒத்துக்கொண்டார்.
அதன்பிறகு அந்த 3 பெரிய இயக்குனர்கள் படத்தை பார்த்துவிட்டு நான் நினைத்தபடி எடுத்த கிளைமாக்ஸ் காட்சிதான் சிறப்பு என்று சொன்னார்கள். பிறகுதான் அதை படத்தில் வைத்தோம். படம் வெற்றிக்கரமாக ஓடியது. அப்போது பேசிய நடிகர் பார்த்திபன், இந்த படத்தின் வெற்றிக்கு சேரன் தான் காரணம் என்று பெருமையாக சொன்னார் என்று அந்த நேர்காணலில் பேசிய இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.





