கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த படம் சித்தா. மிகக் குறைவான பட்ஜெட்டில், கதையை நம்பி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கதை கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகின. இந்த திரைப்படத்தின் இயக்குனரான அருண்குமார், இதற்கு முன்னதாக பண்ணையாரும் பத்மினியும் படத்தை எடுத்திருந்தார்.
கிராமத்தில் வாழும் ஒரு தம்பதியரின் கதையையும், அவர்கள் ஒரு வாகனத்தின் மீது வைத்திருந்த காதலையும் மிக அழகாக அதில் காட்சிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து அவர் இயக்கிய சேதுபதி திரைப்படமும் வெற்றி பெற்றது. அதில் சாதாரண கதை தான் என்றாலும் தனக்கே உண்டான மாஸ் காட்சிகளை அருண்குமார் வைத்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து அருண்குமார் எடுத்த சிந்துபாத் திரைப்படம் அந்த அளவு ஓடவில்லை. பிறகுதான் அவர் சித்தா படத்தை எடுத்து கம் பேக் கொடுத்தார். தற்போது அவர் விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். முதலில் இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டு அதன் பிறகு அவர் முதல் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஒரு நாள் இரவில் இதன் கதை எடுக்கப்படுவது போல் எழுதப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ மற்றும் டீசர் இரண்டுமே வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விக்ரம் கமிட்டானது குறித்த பல்வேறு விஷயங்களை அருண்குமார் பகிர்ந்து இருக்கிறார்.
சேதுபதி படம் முடிந்த பிறகு விக்ரம் சாரிடம் சிந்துபாத் கதையை கூறினேன். ஆனால் இரண்டாம் பாதி சரியில்லை என்று கூறிவிட்டு வேறு ஒரு கதையை என்னிடம் கேட்டார். அப்போது என்னிடம் வேறு கதை குறித்து யோசிப்பதற்கு தோன்றவில்லை. இதனைத் தொடர்ந்து சித்தா திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில் மீண்டும் விக்ரம் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அப்போது சென்று 20 நிமிடங்களுக்கான கதையை கூறினேன். நன்றாக இருக்கிறது இதை டெவலப் செய்து கொண்டு வாருங்கள் என்று விக்ரம் தெரிவித்தார். சித்தா திரைப்படத்தையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்காக ஏற்பாடு செய்தேன். படத்தைப் பார்த்துவிட்டு மறுநாள் காலை ஒரு அரை மணி நேரம் என்னை புகழ்ந்து தள்ளினார். வீர தீர சூரனிலும் நடிக்க அப்போதே ஒப்புக்கொண்டார் என்று இயக்குனர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.





