இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து, பிறகு உள்ளத்தை அள்ளித் தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக் ஹீரோவாகவும், ரம்பா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.
கவுண்டமணி செந்தில் கசன்கான் விஸ்வநாதன் ஜெய்கணேஷ் மணிவண்ணன் ஜோதி மீனா என பலர் நடித்திருந்த இந்த படத்தில் அழகிய லைலா அது இவளது ஸ்டைலா பாடல் மிகப்பெரிய டிரண்டிங்கில் அப்போது இருந்தது. ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பட்டப் பெயர் வரவும் இந்த படம் முக்கிய காரணமாக இருந்தது.
காமெடி காதல் ஜானரில் உருவான உள்ளத்தை அள்ளித்தா படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்தது நடிகர் கார்த்திக் அல்ல. நடிகர் விஜய்தான். விஜய் நடிக்க முடியாத நிலையில்தான் அந்த படத்தில் நடிகர் கார்த்திக் நடித்தார் என்ற தகவலை இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிகர் விஜயை நாயகனாக நடிக்க வைக்க, அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் நேரில் சென்று பேசினேன். அப்போது உள்ளத்தை அள்ளித் தா படம் வருகிற 1996ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சொல்கிறார்.
அந்த தயாரிப்பாளருக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உண்டு என்பதால், அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்கிறார். அதற்கேற்ப உங்கள் மகன் விஜய் கால்ஷீட் தர வேண்டும் என்று எஸ்ஏசியிடம் நான் பேசினேன். ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் நடிகர் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் ரிலீஸ் ஆக இருந்தது.
அதனால் ஒரே தேதியில் விஜய் நடித்த 2 படங்களும் ரிலீஸ் ஆக முடியாது. அதனால் உங்கள் தயாரிப்பாளரிடம் சொல்லி, உள்ளத்தை அள்ளித் தா ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்லுங்கள். விஜயை இந்த படத்தில் நடிக்க சொல்கிறேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் என்னிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உள்ள தயாரிப்பாளர் அதற்கு சம்மதிக்கவே இல்லை. அதன்பிறகுதான் விஜய்க்கு பதிலாக கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார். அதன்பிறகு சுந்தர் சி இயக்கத்தில் எந்த படத்திலும் விஜய் நடிக்கவே இல்லை.





