நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் உலகளவில் இதுவரை ரூ, 325 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி, வசூல் சாதனை புரிந்தது அமரன் படம்தான்.
அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன், தனது சம்பளத்தை ரூ. 55 கோடியாக உயர்த்தி விட்டார். அதே போல் இந்த படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவியும், ரூ. 3 கோடியில் இருந்து தனது சம்பளத்தை ரூ. 6 கோடியாக உயர்த்தியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படத்தின் வெற்றி விழா விரைவில் நடைபெற உள்ளது.
இந்த வெற்றி விழாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று படக்குழுவினருக்கு வெற்றி கேடயங்களை வழங்க உள்ளார். ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஓரிரு வாரங்களில் இந்த வெற்றிவிழா நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் தனது 24வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அடுத்த வாரத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதற்கு முன்பாக இன்று சென்னையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்துக்கான பிரமோ ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற போது, நடிகர் சிவகார்த்திகேயன் தாடியுடன் இருந்துள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்துக்காக தாடி கெட்டப்பில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் சுதா கொங்கரா கிளீன் ஷேவ் செய்துவிட்டு வருமாறு கூறியிருக்கிறார். அதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கோபத்துடன் சிவகார்த்திகேயன் வெளியேறி விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா, உருட்டா என்பது தெரியவில்லை.
ஆனால் ஏற்கனவே இதே கதையில் நடிக்க வந்த நடிகர் சூர்யாவுக்கும், இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்ட அந்த படம் பிரேக் ஆனது. இப்போது மீண்டும் அதே கதையில் நடிக்க வந்த சிவகார்த்திகேயனுக்கும், சுதா கொங்கராவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





