சினிமா என்பது கூட்டுமுயற்சி. தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கூட்டணியில் பல நூறுபேர் இணைந்து உழைத்தால்தான் சில மாதங்களில் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும். நூற்றுக்கணக்கான சினிமா தொழிலாளர்களுக்கு 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல திரைப்படங்களால் பலரும் லாபமடைகின்றனர். சினிமா இன்டஸ்ட்ரி தொடர்ந்து வளர்ச்சி பெறும்.
ஆனால் இப்போதெல்லாம், நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு தலைக்கணமும், சுய கவுரவமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தன்னம்பிக்கைக்கும், தலைகணத்துக்கும் வித்யாசம் தெரியாமல் நடந்துக்கொள்கின்றனர். ஈகோ பிரச்னையால், தன்னிலை மறந்து நடந்து கொள்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்கள், இயக்குனர்களின் சொல் கேட்டு நடப்பவர்களாக, நடிப்பவர்களாக இருக்க காரணம், தனது வளர்ச்சிக்கு அவர்கள் உருவாக்கித் தந்த கேரக்டர்தான் காரணம் என்பதை உணர்ந்திருக்கின்றனர். அதனால் இளம்வயது இயக்குனரை கூட ரஜினி, டைரக்டர் சார் என்றுதான் இன்னும் அழைக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழில், மலையாளத்தில், இந்தியில், கன்னடத்தில் என பிறமொழிகளில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தின் வெற்றியால் புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.
புஷ்பா படத்தை இயக்கிய டைரக்டர் சுகுமாறனுக்கும் பெரிய அளவில் அங்கீகாரமும், அடையாளமும் தெலுங்கு சினிமா உலகில் கிடைத்தது. இந்நிலையில், புஷ்பா 2 படம் 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பிறகு டிசம்பர் 6ம் தேதி என கூறப்பட்டது. இப்போது அடுத்த 2025ம் ஆண்டில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
இப்படி புஷ்பா 2 ரிலீஸ் தேதி தள்ளிப் போக காரணம், புஷ்பா 2 படப்பிடிப்பு அடிக்கடி அல்லு அர்ஜூன் – சுகுமாறனின் ஈகோ மோதலால் அடிக்கடி தடைபடுகிறது. தற்போது ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ., துாரத்தில் ஷூட்டிங் துவங்கிய நிலையில், சீன் பேப்பரை படித்து பார்த்த அல்லு அர்ஜூன் அதில் ஏதோ விளக்கம் கேட்க, டைரக்டர் டென்சன் ஆக ஒரு கட்டத்தில் வாக்குவாதம் நடந்துள்ளது. உடனே அல்லு அர்ஜூன் அங்கிருந்து கிளம்பி விட, அடுத்த சில மணி நேரங்களில் டைரக்டரும் பேக்கப் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். தகவல் அறிந்து தவித்துப்போன படத்தின் தயாரிப்பாளர், இவர்களை வைத்துக்கொண்டு எப்படி புஷ்பா 2 படத்தை முடிக்கப் போகிறேன், என புலம்புகிறார்.





