நடிகர் விஜய் நடிப்பில் இம்மாதம் 5ம் தேதி வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. 386 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், வைபவ், சினேகா மீனாட்சி சவுத்ரி, கனிகா, லைகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் கேமியோ ரோலில் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஏஐ தொழில் நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த், இந்த படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருந்தார்.
விஜய் படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இன்றி, அருகில் உள்ள மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பெரிய அளவில் வசூல் அள்ளும். ஆனால் தி கோட் படத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கிடைத்த அளவுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் வட மாநிலங்களில் தி கோட் படத்துக்கு நல்ல வரவேற்கும் வசூலும் கிடைத்து வருகிறது.
தி கோட் படம் இதுவரை 17 நாட்களில், 440 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுதவிர சாட்டிலைட் உரிமம் ரூ. 90 கோடிக்கும், டிஜிட்டல் உரிமம் ரூ. 120 கோடிக்கும் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது. அதனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இது கணிசமான லாபம் தந்த வெற்றிப் படமாக தான் உள்ளது. இது விஜய் ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் மற்ற மொழிகளில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தி கோட் படம் ரிலீஸ் செய்வதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் இசை வெளியீட்டு விழா நடக்காமலேயே தி கோட் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது இந்த படம் வெளியாகி 17 நாட்களில் 440 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எனவே தி கோட் படத்தின் வெற்றி விழா நடக்குமா என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ஆனால் நடிகர் விஜய் இப்போது தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாட்டை வருகிற அக்டோபர் 27ம் தேதி நடத்த உள்ளார். அதற்கு முன்பாக தி கோட் வெற்றி விழாவுக்கு அனுமதிப்பாரா என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. எனினும் இடையில் ஏதாவது ஒரு நாள் திட்டமிட்டு படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





