தமிழ் சினிமா ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் வசம் இருந்தது. அவர்கள் நடிப்பில் வெளியான படங்கள், ரசிகர்கள் மத்தியில் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், சிவாஜி இருவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படங்களை தந்து, வெற்றிவாகை சூடிய காலகட்டம்தான் அது.
அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னர்களாக கோலோச்சியவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். துவக்கத்தில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்த நிலையில், இவர்களை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் கொழுத்த லாபம் அடைந்தனர். ஆனால் அவர்களின் சம்பளம் கணிசமாக உயரவில்லை.
அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட ரஜினியும், கமலும் இனி இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்கலாம். அப்போதுதான் நமக்கான வருமானத்தை, சம்பளத்தை பெற முடியும் என்று கலந்துபேசி முடிவு செய்தனர். அதன்பிறகு 40 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர்.
இப்போதும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவருக்கு பிறகுதான் விஜய், அஜீத்குமார் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு தற்போது 73 வயதான நிலையில், கமல்ஹாசன் அடுத்த நவம்பர் மாதம் 7ம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயதிலும், அனுபவத்திலும் ரஜினி, கமல் இருவருமே தமிழ் சினிமாவுக்கு சூப்பர் சீனியர்களாக இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் அடையாளம் காணப்படும் அளவுக்கு ரஜினி, கமல் இருவருமே சினிமா கலைஞர்களாக நிறைய சாதனைகளை செய்துவிட்டனர். முதுமை இருவரது தோற்றத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது. சினிமாவில் நடிப்பு நடிப்பு என பல காலம் ஓடி ஓடி களைத்த களைப்பு, இருவரது முகங்களிலும் படிந்து காணப்படுகிறது.
ஆனால் இப்போதும் அடுத்தடுத்த படங்களில் இருவரும் நடிக்க கமிட் ஆகி வருகின்றனர். முதுமை, சீனியாரிட்டி அடிப்படையில் இருவருமே சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் சில படங்களில் கேமியோ ரோல், கெஸ்ட் ரோலில் சில காட்சிகளில் நடித்து விட்டுச் செல்லலாம். எதற்காக இன்னும் படங்களில் நடித்து ஹீரோயிசம் காட்டி என்ன செய்யப் போகிறார்கள், என ரசிகர்கள் பலரும் விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர். ஆனால் ஒரு படத்துக்கு 140 கோடி, 150 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்போது, அவர்கள் ஓய்வில் இருக்க சம்மதிப்பார்களா என்றும் பலர் கலாய்த்து வருகின்றனர்.





