தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கன்னிப்பருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை வடிவுக்கரசி. அதன்பிறகு முதல் மரியாதை போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த பல ஆண்டுகளாக அம்மா கேரக்டர்களில் நடித்து வரும் நடிகை வடிவுக்கரசி சமீபத்தில் கான்சிட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் நடிகை வடிவுக்கரசி பேசியதாவது, நான் இன்று அனைவரது முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்தது போல. அதற்கு காரணமான அனைவருக்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றி.
இந்த படத்தில் நடித்தபோது எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்கான மருத்துவ செலவு ஆபரேஷனுக்கு பெரும் தொகை தேவைப்பட்டது. அப்போது என்னை தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் என்று சுகாசினி பேசினார். அவருடன் ஸ்ரீ பிரியாவும் இணைந்து உதவினார்கள். அவர்கள் ராஜ்குமார் சேதுபதி மணிரத்னம் கார்த்தி சூர்யா ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஏசிஎஸ் சண்முகம் சரத்குமார் ராதிகா உள்ளிட்ட பலருடன் பேசி பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கையை அளித்தார்கள். இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள் தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
அந்த காலத்தில் 25 வாரங்கள் 50 வாரங்கள் 100 நாட்கள் 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டது. இன்று 25வது நாள் விழாவாக இருந்தாலும் அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும் ரசிகர்களின் கருத்துக்களையும் பார்த்தேன்.
டிரெய்லரை பார்த்துவிட்டு படம் நன்றாக இருந்தால் பார்ப்போம் என்று நினைத்தவர்கள் படம் பார்த்த பிறகு ஒரு நிமிடம் கூட சலிக்காமல் முழு படத்தையும் ரசித்தோம் என்று கூறியதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பலரும் எழுதி இருந்தார்கள்.
அந்த பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. வடிவுக்கரசி நன்றாக நடித்து இருக்கிறார் என்று மட்டும் எழுதாமல் அவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்றும் எழுதுங்கள். அடுத்த வாய்ப்பை பெற்று தரும். இந்த படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் யோகி பாபு உட்பட பலர் அடுத்த படங்களில் பிஸியாகி விட்டனர்.
ஆனால் நான் வீட்டில் சும்மா இருக்கிறேன். ஆகவே எனக்கு வாய்ப்பு கொடுங்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 படங்களில் நடித்து விட்டேன். இப்போதும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு பணம் சம்பளம் தேவை. ஆகவே எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு நாள் இரண்டு நாள் வேலை என்றால் கூட பரவாயில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நடிகை வடிவுக்கரசி பகிரங்கமாக மேடையில் கோரிக்கை விடுத்து பேசியிருக்கிறார்.





