கௌதம் மேனன் தற்போது மலையாளத்தில் நேரடியாக திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மம்முட்டி இதன் ஹீரோ. டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் துப்பறிவாளர் கதாபாத்திரத்தில் வருகிறார் மம்முட்டி. நகரில் அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போக அதன் மர்மத்தை கண்டுபிடிக்கும் கதை தான் இது என்று கூறப்படுகிறது.
இயக்கம் ஒரு பக்கம் இருக்க நடிப்பிலும் கௌதம் மேனன் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜியின் 69 ஆவது திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் கௌதம் மேனன் மீண்டும் இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஷால், தனது அடுத்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக அறிவித்திருந்தார். விஜயை வைத்து அவர் ஏற்கனவே யோகான் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்க இருந்தார். தற்போது அந்த கதையை தான் அவர் சற்று மாற்றியமைத்து எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் கௌதம் மேனன் ஏராளமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் முக்கியமாக தனது அடுத்த படம் குறித்தும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, வெற்றிமாறன் கதையில் நான் ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். இதற்கான ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது.
இது மிகவும் விறுவிறுப்பான கதை. அதை திரைக்கதையாக மாற்றும்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். நான் நடிப்பதை முற்றிலுமாக வெறுக்கிறேன். அதேசமயம் இதனை என்னால் இயக்குனர்களிடம் கூற முடியவில்லை.
இப்போது கூட நான் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கின்றேன். மிகவும் ஜாலியான இந்த திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மட்டும் ரொம்ப சீரியஸாக இருக்கும். இதனை நான் சந்தானத்துடன் மிகவும் மகிழ்ச்சியோடு செய்தேன். பிரதீப் ரங்க நாதனின் டிராகன் திரைப்படத்தில் நான் நடனமும் ஆடியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





