மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான படம் குட்பேட் அக்லி. அஜீத்குமார் திரிஷா அர்ஜூன்தாஸ் பிரபு பிரசன்னா பிரியா வாரியர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
எனினும் உலகளவில் இந்த படம் பெரிய வசூலை குவிக்கவில்லை. அதனால் குட் பேட் அக்லி படத்தை தயாரித்த வகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் குட் பேட் அக்லி படத்தில், தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி கேட்டு இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் முறையாக அனுமதி பெற்றுதான் இளமை இதோ இதோ ஒத்த ரூபா தாரேன் என்ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை குட்பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. யார் உரிமையாளர், யாரிடமும் அனுமதி பெறப்பட்டது போன்ற தகவல்கள் இல்லை என்று கோர்ட்டில் இளையராஜா தரப்பு புகார் தெரிவித்தது.
மேலும் இசையின் பதிப்புரிமை பெற்ற எங்களிடம்தான் உரிமம் அனுமதி பெற வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு வாதிட்ட நிலையில் குட்பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையமைத்த குறிப்பிட்ட பாடல்களை நீக்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அந்த பாடல்கள் நீக்கப்படாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்ததால் கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி இளையராஜா தரப்பு எச்சரித்தது.
தொடரும் இந்த பிரச்னைகளால் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் குட் பேட் அக்லி படத்தையே தங்களது தளத்தில் இருந்து நீக்கி விட்டது. இதனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தால் ரூ. 70 கோடி நஷ்டமடைந்த தயாரிப்பு நிறுவனம், நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து படம் நீக்கப்பட்டதால் வாங்கிய பணத்தை திருப்பித் தர வேண்டும். அல்லது ஓடிடி நிறுவனம் தரப்பில் பணம் தரவேண்டி இருந்தால் அது கிடைக்காது.
இப்படி ஒரு மோசமான சூழலில் மேலும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மீண்டும் தங்களது தயாரிப்பில் அஜீத்குமார் நடிக்க வேண்டும் எனவும், சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளவும் அஜீத்குமாரிடம் கேட்க திட்டமிட்டுள்ளது. இசைஞானி இளையராஜா தந்த குடைச்சலால் இப்போது அஜீத்குமாருக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.





