நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. 2 ஆண்டுகளாக அஜீத் படமே இல்லாமல் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, 2 மாத இடைவெளியில் 2 படங்கள் வெளிவருகின்றன.
இப்படி ஒரு சந்தோஷத்தை ரசிகர்களுக்கு தருவதற்காக தனது படங்கள் அடுத்தடுத்து வெளிவர அஜீத்குமார் கடந்த ஆண்டில் 2 படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்துக்கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொங்கலுக்கே வர வேண்டிய விடாமுயற்சி, வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது.
குட் பேட் அக்லி படத்தில் அஜீத்குமார் 3 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். திரிஷா விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. அதனால் அஜீத்குமார் கெட் அப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில் பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் போது பிரிமியர் ஷோ வெளியிடுவது வழக்கம். படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாளில் பிரிமியர் ஷோ காட்டப்படும். ஆனால் இதில் டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட 3 அல்லது 4 மடங்கு அதிகமாக இருக்கும். வெறித்தனமான ரசிகர்கள், அதிக விலை கொடுத்து தங்களது ஹீரோக்களின் படங்களை பிரிமியர் ஷோவில் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படமும் பிரிமியர் ஷோ திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. முன்னதாக 9ம் தேதி இரவு குட் பேட் அக்லி பிரிமியர் ஷோ தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் திரையிடப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் வழக்கம் போல, பிரிமியர் ஷோவுக்கான அதிக கட்டணம் இல்லாமல் வழக்கமான கட்டணங்களில் மட்டுமே இந்த பிரிமியர் ஷோ திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது. சென்னை கோவை திருச்சி மதுரை திருப்பூர் தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் இந்த பிரிமியர் ஷோ நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஒரு நாள் முன்னதாக குட்பேட் படத்தை ஏகே ரசிகர்கள் பார்த்து ரசித்து கொண்டாடலாம்.





