தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக முன்னணியில் இருப்பவர் தனுஷ். தயாரிப்பாளர் பாடகர் இயக்குனர் என தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் உருவான இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
இட்லி கடை படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் கேரக்டரில் பார்த்திபன் வருகிறார். மேலும் முதன்முறையாக நடிகர் தனுஷ் உடன் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நாயகியாக நித்யாமேனன், முக்கிய கேரக்டரில் ராஜ்கிரண் உள்ளிட்டோரும் இட்லி கடை படத்தில் நடித்திருக்கின்றனர்.
நடிகர் பாடகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த நடிகர் தனுஷ் ப பாண்டி என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ராயன் படத்தை இயக்கினார். இது அவரது 50வது படமாகும். கடந்தாண்டில் வெளியான இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தில் பாஸ்ட் புட் கடை நடத்தும் நாயகனாக தனுஷ் நடித்திருந்தார். அவரது தம்பிகளாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராமும் தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். மேலும் செல்வராகவன் சரவணன் பிரகாஷ் ராஜ் அபர்ணா பாலமுரளி இளவரசு எஸ்ஜே சூர்யாவும் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
தனுஷ் இயக்கிய ராயன் படம் ரூ. 100 கோடி வசூலித்த மாஸ் ஹிட் படமாக இருந்தது. இப்போது வெளியாக உள்ள இட்லி கடை படமும் ராயன் போல பெரிய வெற்றியை பெறும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தடபுடலாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கூறியதாவது, ராயன் படத்தில் தனது தம்பிகளில் ஒருவராக என்னை நடிக்குமாறு நடிகர் தனுஷ் என்னிடம் சொன்னார். ஆனால் அது அவருக்கு துரோகம் செய்யும் கேரக்டர் என்பதால் நான் நடிக்க மறுத்து விட்டேன். படத்தில் கூட என் நண்பருக்கு துரோகம் செய்ய மாட்டேன். படத்தில் வரும் அந்த 4 பேர் பட்டியலில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன் என்று ஜீவி பிரகாஷ்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





