நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கேரள மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளை மேற்கொண்டார் இயக்குனர் நெல்சன். தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூருவில் இதன் படபிடிப்பு நடைபெற இருக்கிறது. இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது.
இதேபோல் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். தற்போது அதற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள்தான் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படி இந்த ஆண்டு கூலி அடுத்த ஆண்டு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். மேலும் தனது அடுத்த திரைப்படம் குறித்த கதையையும் அவர் தீவிரமாக கேட்டு வருகிறாராம். அனேகமாக இந்த படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்திடம் ஒரு சில இயக்குனர்கள் கதையைச் சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில், ஹெச் வினோத் ரஜினிகாந்தை தொடர்ந்து இரண்டு முறை சந்தித்து இருப்பதாக தமிழ் திரைத்துறை வட்டாரத்தில் தகவல் கசிந்து இருக்கிறது. தற்போது அவர் விஜயை வைத்து ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் தனது கடைசி திரைப்படம் இது என தெரிவித்து இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருக்கிறது. இதனால் இயக்குனருக்கு பொறுப்பு சற்று கூடியிருக்கிறது என்றே கூறலாம். ஏற்கனவே அவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தார். கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.
இப்படி ஒரு சமயத்தில் அவர் ரஜினிகாந்திடம் சென்று கதை கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என சினிமா விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு, ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன.





