இயக்குனர் ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கினார். தனது மைத்துனர் அருண் விஜயை வைத்து இந்த திரைப்படத்தை அவர் எடுத்தார். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.
இயக்குனர் ஹரியின் வழக்கமான திரைப்படங்களின் சாயலையே இது ஒத்திருந்தாலும், வழக்கம்போல் திரைக்கதை படு வேகமாக எடுக்கப்பட்டிருந்ததால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதன் காரணமாக யானை திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை கொடுத்தது.
இந்தத் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலுடன் இணைந்தார் ஹரி. ஏற்கனவே விஷாலை வைத்து அவர் தாமிரபரணி மற்றும் பூஜை என்ற இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். இதன் காரணமாக இவர்களது கூட்டணி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்திற்கு ரத்னம் என பெயர் வைக்கப்பட்டது. வழக்கம்போல சொன்ன தேதியில் ஷூட்டிங் பணிகளை விஷால் நிறைவு செய்தார். இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக பணிகள் நிறைவுபெற்ற நிலையில் தற்போது இதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த மறுவாரமான ஏப்ரல் 26 ஆம் தேதி ரத்னம் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ரத்னம் திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக ஹரி திரைப்படம் என்றால் அதில் வட்டார வழக்கு மொழி தூக்கலாக இருக்கும். குறிப்பாக நெல்லைத் தமிழ் அவர் திரைப்படத்தில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஆனால் இந்த ட்ரெய்லரில் அப்படி எதுவும் இல்லை. வழக்கமான தனது பாணியை ஹரி கைவிட்டு இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். முக்கியமாக தமிழ்நாடுக்கும் ஆந்திராவுக்கும் இடையேயான கதையை இந்த திரைப்படம் கூறுவது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் பிரியா பவானிசாகர் காப்பாற்றும் பொறுப்பில் விஷால் சண்டை போடுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல் அருவருக்கத்தக்க ஆபாசமான வார்த்தைகளும் ட்ரெய்லரில் இடம்பெற்று இருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.





